பாபநாசம் டூ கோட்டை.. தமிழ்நாட்டில் ஐயூஎம்எல் கட்சியின் முதல் அமைச்சர்.. யார் இந்த ஆடுதுறை ஷாஜகான்?
சென்னை: சட்டசபைத் தேர்தல் முடிவுகள், தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளது.
அதன்படி ஐயூஎம்எல் சார்பாக பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவரை ஷாஜகான் என்று சொல்வதற்கு பதிலாக ஆடுதுறை ஷாஜகான் என்று சொல்லலாம். ஏனென்றால் ஐயூஎம்எல் கட்சியின் மிக முக்கியமான களப்பணியாளர். தஞ்சாவூர் மாவட்டத்தின் டெல்டா அரசியல் சூழலில் நீண்ட காலமாகக் கட்சிப் பணியாற்றி வருபவர்.

இஸ்லாமியச் சமூக மக்களின் உரிமைகளுக்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். திருவிடைமருதூர் தாலுகாவில் ஆடுதுறை தான் சொந்த ஊர். இதன் காரணமாகவே ஆடுதுறை ஷாஜகான் என்று அழைக்கப்படுகிறார். இவரின் மனைவி ஷமிம் நிஷாவும் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சி மன்ற 10வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். டெல்டாகாரர் என்பதால் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பி.எஸ்சி பட்டம் பெற்றவர். சிறுவயது முதலே ஐயூஎம்எல் கட்சியில் பணியாற்றி வரும் ஷாஜகான், தற்போது மாநிலச் செயலாளராக இருக்கிறார்.
திருமங்கலக்குடியில் அஸ்-ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவன செயலாளராக கல்வி சேவையாற்றி வருகிறார். அதேபோல் உளுந்தூர்பேட்டை அருகே உருவாகி வரும் ஸாலிஹீன் மருத்துவ கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் நிறுவன அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார்.
இவர் ஏற்கனவே 2016 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் சார்பாக பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதன்பின் 2021 சட்டசபைத் தேர்தலில் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்ட ஷாஜகான், 69,284 வாக்குகள் பெற்று 1,065 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல்முறையாக வெற்றி பெற்றார். தமிழ்நாட்டில் ஐயூஎம்எல் சார்பாக அமைச்சரான முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சிறுபான்மை நலத்துறை அமைச்சராக ஷாஜகான் பொறுப்பேற்றுள்ளதால், தமிழகத்தின் சிறுபான்மையின மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நலத்திட்டங்களை மேம்படுத்தும் மிக முக்கியமான பணிகள் காத்திருக்கிறது. இதனால் ஷாஜகான் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications