புது அணை கட்ட பிரதமரிடம் அனுமதி கோரிய உம்மன் சாண்டி- பதிலே தராத மன்மோகன்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசுவதற்காக கேரள முதல்வர் உம்மன் சாண்டி நேற்று டெல்லி சென்றார்.
முதலில் சோனியாவை சந்தித்து பேசினார். அப்போது அவர் கேரள மக்களின் பாதுகாப்பு கருதி முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டியே ஆக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கேரளா தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கவில்லை. அதே சமயம் 116 ஆண்டு பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணை இருக்கும் இடுக்கி மாவட்டத்தில் அடிக்கடி நிலஅதிர்வுகள் ஏற்படுவதால் புதிய அணை கட்டுவது தான் நல்லது என்று அவர் சோனியாவிடம் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு அவர் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து பேசினார். அப்போது அங்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் இருந்தார். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று உம்மன் சாண்டி பிரதமரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இருப்பினும் பிரதமர் மன்மோகன் சிங், சாண்டிக்கு எந்தவிதமான உத்தரவாதமும் தரவில்லை என்று கூறப்படுகிறது. மாறாக, சாண்டி கூறியதைக் கேட்டுக் கொண்டாராம், அவர் கொடுத்த மனுவை வாங்கிக் கொண்டாராம்.
முன்னதாக உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அணை இருக்கும் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது தான் எங்களுக்கு கவலை அளிக்கிறது. கேரள மக்களின் பாதுகாப்பு பற்றி தான் எங்களுக்கு கவலையாக உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என்று நாங்கள் எப்பொழுதுமே கூறியதில்லை. இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.
அதிமுக எம்பிக்கள் இன்று பிரதமரை சந்தித்து சர்ச்ச்கைக்குரிய முல்லைப் பெரியாறு அணை வவிகாரம் குறித்து பேசவிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications