கல்லூரி பஸ், பைக் மோதியதில் ஒருவர் பலி, 50 மாணவ, மாணவியர் காயம்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் தனியார் கல்லூரி பேருந்து பைக் மீது மோதியதில் கல்லூரி ஊழியர் ஒருவர் பலியானர். இந்த விபத்தில் கல்லூரி பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் அதில் பயணித்த 50 கல்லூரி மாணவ, மாணவியர் காயமடைந்தனர்.
குமரி மாவட்டம், நாகர்கோவில் புறநகர் பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் தெங்கம்புதூர், கோட்டார், ஒழுகினசேரி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்கண்ட பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு கல்லூரி பேருந்து கல்லூரியை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தைசுசீந்திரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ஓட்டினார். பேருந்து வெள்ளமடத்தை அடுத்த வளைவில் திரும்பிய போது எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த நெல்லை மாவட்டம் திடியூரைச் சேர்ந்த முத்து படுகாயமடைந்தார். அவர் ஒரு கல்லூரி ஊழியர்.
அதன் பிறகு பேருந்தின் பின்சக்கர ஆக்சில் உடைந்து சாலையில் 2 முறை குட்டிக்கரணம் அடித்து தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த 50 மாணவ, மாணவியர் படுகாயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். பைக்கில் வந்த முத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பலியானார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கலெக்டர் மதுமதி, மாவட்ட வருவாய் அதிகாரி பழனிச்சாமி, தாசில்தார் புரூஸ், நாகர்கோவில் எம்.எல்.ஏ.நாஞ்சில் முருகேசன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவியருக்கு ஆறுதல் கூறினர்.
விபத்து குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியர் சிலர் கூறியதாவது,
கல்லூரி பஸ், பைக் மீது மோதிய சில நொடிகளில் பஸ் தலைக்கீழாக கவிழ்ந்தது. இதனால் பஸ்சுக்குள் இருந்த நாங்கள் அங்கும் இங்குமாக மோதி மயக்கம் அடைந்தோம் என்றனர்.












Click it and Unblock the Notifications