மாற்றுத் திறனாளிகள் தினம் - முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
இன்று (டிசம்பர் 3) அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்நாளில் தமிழகத்தில் இருக்கின்ற மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களது நல்வாழ்வுக்காக நான் முதன்முதலில் ஆட்சிப் பொறுப்பேற்றதும் 1994 ஆம் ஆண்டிலிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கென புதிதாக மாநில கொள்கை ஒன்றை வகுத்து வெளியிட்டேன். அதன் பிறகுதான், 1995 ஆம் ஆண்டு மத்திய அரசு மாற்றுத் திறனாளிகளுக்கென ஒரு சட்டத்தை உருவாக்கியது என்பதனை இத்தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றுத் திறனாளிகளுக்காக அரசின் சார்பாக பல நல்ல திட்டங்களை நான் வழங்கி வருவது உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள், உரிமைகள், பாதுகாப்பு மற்றும் முழுப்பங்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
மாற்றுத் திறனாளிகளுக்கு சமுதாய வளர்ச்சியில் முழுவதுமாக உதவிட நான் என்றுமே பின் வாங்கியது இல்லை. எனவேதான் மாற்றுத்திறனாளிகளும் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு 4 கிராம் தங்கம் வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.
மேலும் மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்ய ஏதுவாக தனியாக மின்தூக்கி வசதியுடன் கூடிய பேருந்துகளையும் அறிமுகப்படுத்தியுள்ளேன். மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற சூழ்நிலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2003 ஆம் ஆண்டிலேயே சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லைக்கு உட்பட்ட கட்டிடங்கள், பொது இடங்கள் ஆகியவற்றிற்கு மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி சென்றுவர கட்டிட விதிமுறைகளில் மாற்றம் செய்து நான் ஆணையிட்டுள்ளதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
இந்த முறையை தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் பின்பற்றும் வகையில் உரிய சட்டத்திருத்தங்களை எனது அரசு விரைவில் கொண்டு வரும். மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அரசு பணியிடங்களில் 3 சதவிகித இடஒதுக்கீட்டை முனைப்பாக இந்த அரசு நிறைவேற்றிடும் என்பதனை தெவித்துக் கொள்கிறேன்.
மாற்றுத் திறனாளிகளின் தேவைகள் அனைத்தும் அறிந்து சமுதாயத்தில் அவர்களை ஏற்றமிக்கவர்களாக உயர்த்திட நான் உதவுவேன் என்பதை இந்நாளில் தெரிவித்துக் கொண்டு அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications