சபரிமலைக்கு செல்லும் தமிழக மக்களை தாக்கும் கேரள இளைஞர் காங்கிரஸார்- திருமாவளவன்
கடலூர்: சபரிமலைக்கு செல்லும் தமிழக மக்களை கேரள இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் தாக்கி வன்முறையை தூண்டி வருகின்றனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் இரு மாநிலங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இந்த பேச்சுவார்த்தையில் தமிழக அரசு பங்கேற்காது என்று கூறியுள்ளது. அரசின் இந்த முடிவு தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பேச்சுவார்த்தையில் தமிழக அரசு கலந்து கொள்ள வேண்டும்.
சபரிமலைக்கு செல்லும் தமிழக மக்களை கேரள இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் தாக்கி வன்முறையை தூண்டி வருகின்றனர். அவர்களின் செயல் இரு மாநிலங்களுக்கிடையே வன்முறையை உருவாக்கும்.
சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது. இதனால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.