இணையத்தளங்களில் அநாகரீகமான கருத்துக்கள்-தடுக்க மத்திய அரசு தீவிரம்

இது தொடர்பாக கூகுள், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களின் இந்தியக் கிளைகளின் அதிகாரிகளுடன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் பேச்சு நடத்தினார்.
ஆனால், அதில் எழுதப்படும் கோடிக்கணக்கான கருத்துக்களைக் கண்காணிப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதோ அல்லது நீக்குவதோ சாத்தியமான செயல் இல்லை என்று அவர்கள் கபில் சிபலிடம் தெரிவித்துவிட்டனர்.
எழுதப்படும் ஒவ்வொரு கருத்தையும் கண்காணித்து கட்டுப்படுத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்று கூறிய அதிகாரிகள், இது தொடர்பாக வாக்குறுதி எதையும் அளிக்க முடியாது என்றும் கூறிவிட்டனர்.
அதே நேரத்தில் ஏதாவது குறிப்பிட்ட கருத்து குறித்து தங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தால் அதை உடனடியாக நீக்குவது குறித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், இணையத்தளங்களை சென்சார் செய்ய அரசு முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய கபில் சிபல், இணையத்தள கருத்துகளை சென்சார் செய்ய அரசு முயற்சிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறு. அப்படி எந்தத் திட்டமும் எங்களிடம் இல்லை.
பேஸ்புக், டுவிட்டர், கூகுள் போன்றவற்றில் வெளியிடப்படும் சில கருத்துகளும், படங்களும் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. மக்களின் உணர்வுகளையும், மத உணர்வுகளையும் யாரும் காயப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இந்த விஷயத்தில் பேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள் முன்பு அரசு கேட்டுக்கொண்டபடி போதிய ஒத்துழைப்பு தரவில்லை. இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை கண்காணித்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு செப்டம்பர் மாதம் முதலே பேஸ்புக், மைக்ரோசாப்ட் மற்றும் யாகூ நிறுவனங்களுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறேன்.
அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் நேற்று நடந்த சந்திப்பில் இதுதொடர்பாக தங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறிவிட்டனர்.
இதனால் இந்த சமூக இணையத்தளங்களில் கருத்துக்களை வெளியிடும் முன்பே அதை கண்காணித்து, தேவைப்பட்டால் தடுப்பதற்கான வழிகாட்டு விதிமுறைகளை அமலாக்குவது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது என்றார் கபில் சிபல்.












Click it and Unblock the Notifications