'கிங்' விஜய் மல்லையாவுக்கு இன்னொரு கெட்ட செய்தி!

சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டத்தை அறிவித்து இதனால் நாடு முழுவதும் வர்த்தகர்களும் எதிர்க் கட்சிகளும் போராட்டத்தில் இறங்க, அந்தத் திட்டத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இந் நிலையில் இந்திய விமான சேவை நிறுவனங்களில் 26 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கோரி விஜய் மல்லையா உள்ளிட்ட விமான நிறுவன அதிபர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, அந்தத் திட்டத்துக்கு அனுமதியும் தர முடிவு செய்த மத்திய அரசு, திடீரென அதிலிருந்து பின்வாங்கியுள்ளது.
விமான நிறுவனங்களில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கலாம் என்று மத்திய வரத்தகத்துறை அமைச்சத்தின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுப் பிரிவு மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்திருந்தது.
இந்தப் பரிந்துரையை மத்திய நிதியமைச்சகம் ஏற்பதாக அறிவித்திருந்தது.
ஆனால், திடீரென நேற்றிரவு இந்தத் திட்டத்துக்கும் மத்திய அரசு 'பிரேக்' போட்டுள்ளது. இப்போது இந்தத் திட்டத்துக்கு அனுமதி தந்தால், அது கிங்பிஷருக்காகவே மத்திய அரசு எடுத்த முடிவு என்று வெளியில் பேசுவார்கள் என்பதால், திடீரென தனது முடிவிலிருந்து அரசு பின்வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் இந்திய பங்குச் சந்தை விதிகளின்படி அன்னிய நிறுவனங்கள் இந்திய விமான நிறுவனங்களில் வெறும் 26 சதவீத பங்குகளை மட்டும் வாங்க முடியாது. ஒரு விமான நிறுவனத்தில் 26 சதவீத பங்குகளை வாங்கும் அன்னிய நாட்டு நிறுவனங்கள், மேலும் 26 சதவீத பங்குகளை சந்தையிலிருந்தும் வாங்க வேண்டும்.
இதன்படி, அன்னிய நிறுவனங்கள் வசம் கிட்டத்தட்ட 52 சதவீத பங்குகள் போய்விடும். இன்னும் விளக்கமாக சொன்னால், இந்திய விமான நிறுவனமே அன்னிய நாட்டு முதலீட்டாளர் வசம் போய்விடும்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பலாம். மல்லையாவை காப்பாற்றுவதற்காக நாட்டின் விமான நிறுவனங்களையே அன்னிய நிறுவனங்களிடம் மத்திய அரசு அடகு வைக்கிறது என்ற கெட்ட பெயரும் வரலாம்.
ஏற்கனவே சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நிறுவனங்களின் நேரடி முதலீட்டை அனுமதிப்பதாகக் கூறி சிக்கலில் மாட்டி விழி பிதுங்கி, இப்போது அதிலிருந்து வெளியேறி தப்பியோட முயற்சிக்கும் மத்திய அரசு விமான நிறுவனங்கள் விஷயத்தில், குறிப்பாக ஒரு மல்லையாவுக்காக, கெட்ட பெயர் வாங்கத் தயாராக இல்லை (அட்லீஸ்ட், கொஞ்ச காலத்துக்காகவாவது).
இதனால், விமானத்துறையில் அன்னிய முதலீடு திட்டத்தையும் மத்திய அரசு கிடப்பில் போடவுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, Centre for Asia Pacific Aviation என்ற விமானத்துறை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில், 2012ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள், அதாவது அடுத்த 3 மாதங்களுக்குள், இந்திய விமான நிறுவனங்களுக்கு ரூ. 12,000 கோடி முதல் ரூ. 15,000 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட பாதி நஷ்டம், ஏர் இந்தியாவுக்கே ஏற்படப் போகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
ரொம்ப கஷ்டம் தான்!












Click it and Unblock the Notifications