சட்டசபையில் "அப்பாவைக் காணோம்" என முதல்வர் விஜய் பேசியது தவறு.. பெ சண்முகம்
சென்னை: தமிழக சட்டசபையில் இல்லாத ஒருவரை குறிப்பிட்டு "அப்பாவைக் காணோம்" என்று முதல்வர் விஜய் பேசியது தவறு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும், அதற்கு பதிலடியாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறிய "கணவனைத் தேடும் மனைவி" என்ற கருத்தும் ஏற்கத்தக்கதல்ல என் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நேற்று பேசிய முதல்வர் விஜய் எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து பேசினார். அப்போது குட்டிக்கதை ஒன்றை கூறிய விஜய், "ஒரு ஊருல பெரியவர் வெய்யில் அதிகமாக இருப்பதாக தெரிவித்து கண்ணில் கைவைத்து தேடிக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த சிறுவன் ஒருவன் என்ன தேடுறீங்க என்று கேட்க, அந்த பெரியவர், உங்க அப்பா இங்கதான் இருப்பாருன்னு சொன்னங்க..

குட்டிக் கதை சொல்லி விமர்சித்த விஜய்
அவரைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறேன். எங்க.. உங்க அப்பாவையே காணோம்" என்று கூறிவிட்டு எங்களுக்கும் இதேபோல, நக்கலும் நையாண்டியும் பண்ண தெரியும் என திமுகவை மறைமுகமாக சாடினார். கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வியை விமர்சித்து முதல்வர் விஜய் இவ்வாறு பேசிய நிலையில், திமுக தரப்பில் இருந்து காட்டமாக பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும், "செங்கல்பட்டு கோர்ட்டில், கணவனைத் தேடும் மனைவி" என காட்டமாக விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் விஜய் சட்டசபையில் அப்பாவை காணோம் என பேசியது தவறானது என்றும், குறிப்பாகச் சட்டமன்றத்தில் இல்லாத ஒருவரைப் பற்றி இப்படி பேசுவது மிகவும் தவறானது என கூறியுள்ளார். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ சண்முகம் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:-
மிகவும் தவறானது
தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. அதிலும் குறிப்பாகச் சட்டமன்றத்தில் இல்லாத ஒருவரைப் பற்றி, "அப்பாவைக் காணோம்" என்று கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் பேசியது மிகவும் தவறானது.
இதற்கு எதிர்வினையாக, எதிர்க்கட்சித் தலைவர் "கணவனைத் தேடும் மனைவி" என்று பேசியதும் தவறுதான். "ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்" என்பதை உணர்ந்து இருதரப்பினரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்." என்று கூறியுள்ளார். முன்னதாக வீரபாண்டியனும் முதல்வர் விஜய் பேசியது தவறு என்றும், உதயநிதி ஸ்டாலினும் அப்படி பேசியிருக்கக் கூடாது என கூறியிருந்தார்.














Click it and Unblock the Notifications