முல்லைப் பெரியாறு விவகாரம்: அரசியல் சட்டத்தை மதிக்காத கேரள அரசை கலைத்தாலும் தவறில்லை- ராமதாஸ்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை தடுத்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கேரள அரசு, அதற்காக மத்திய அரசை மிரட்டி பணியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணை வலிமையாக இருப்பதாகவும், அதனால் கேரளத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் அம்மாநில அரசின் தலைமை வழக்கறிஞரே கேரள உயர் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். அதன் பிறகும் இரு மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் கேரளம் ஈடுபட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
எப்படியாவது புதிய அணையை கட்டிவிட வேண்டும் என்பதற்காக சட்டத்திற்கு எதிரான வழிமுறைகளை கேரள அரசு கையாளுகிறது. தமிழக அரசின் பராமரிப்பிலிருக்கும் முல்லைப் பெரியாறு அணைக்குள் புகுந்து கேரள இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியிருப்பதும், தமிழகத்தைச் சேர்ந்த வாகனங்களை கேரளத்திற்குள் நுழையவிடாமல் தாக்கி திருப்பி அனுப்புவதும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
கேரள அரசின் இச்செயல்கள் தேச ஒற்றுமைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிராக அமைந்துள்ளன. அரசியல் சட்டத்தை மதிக்காமல் செயல்படும் கேரள அரசை கலைத்தால்கூட அது தவறான நடவடிக்கையாக இருக்காது.
மாநிலங்களுக்கிடையிலான உறவுகளை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வரும் கேரள அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும் - முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான கேரள அரசின் முயற்சிகளை தடுத்துநிறுத்த வேண்டும் - உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லைப் பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும்.
அணையை பாதுகாக்கும் பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக சார்பில் 12ம் தேதி காலை 10 மணிக்கு தேனி மாவட்டம் கம்பத்தில் தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும். இப்போராட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையேற்பார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications