உளவுப்பிரிவு டி.ஐ.ஜி.யாக தாமரைக்கண்ணன் நியமனம்-தூக்கப்பட்டார் பொன்.மாணிக்கவேல்: ஜெ அதிரடி

அவருக்குப் பதிலாக மாநில உளவுப்பிரிவு டி.ஐ.ஜியாக தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்போது சென்னை நகர சட்டம்- ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனராக உள்ளார்.
தாமரைக்கண்ணன் வகித்து வரும் சென்னை நகர சட்டம்- ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் பதவியில் சஞ்சய் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்போது சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக உள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில், சென்னை மாநகர கமிஷனராக இருந்த டி.ராஜேந்திரனை தேர்தல் ஆணையம் உளவுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக நியமித்தது.
அதிமுக ஆட்சிக்கு வந்த முதல் நாளே அவரை முதல்வராக ஜெயலலிதா சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பியாக நியமித்தார். ஆனால், அடுத்த இரண்டே நாட்களில், தமிழக போலீசின் மிக முக்கிய பதவியான உளவுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக ராஜேந்திரன் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
பின்னர் அவரை மாற்றிவிட்டு பொன் மாணிக்கவேலை முதல்வர் உளவுப் பிரிவு டி.ஐ.ஜியாக நியமித்தார். இந் நிலையில் அவரும் தூக்கப்பட்டுள்ளார்.
மைலாப்பூர் போலீஸ் நிலையத்தில் கத்திக்குத்து-எஸ்ஐ, போலீஸ்காரர் சஸ்பெண்ட்:
இதற்கிடையே சென்னை மைலாப்பூர் போலீஸ் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக பணியில் கவனக்குறைவாக இருந்ததாக அந்த போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டரும், போலீஸ்காரரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மைலாப்பூர் சத்தியவாணிமுத்து நகரைச் சேர்ந்த பா.ம.க முன்னாள் கவுன்சிலர் மணிவண்ணன். இவரது மகள் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். விளையாட்டு வீராங்கனையான அவர், அதே பகுதியைச் சேர்ந்த பிலால் என்ற வாலிபரை காதலித்து அவரோடு வீட்டை விட்டும் சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மணிவண்ணன் மைலாப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வந்தனர். இந்த நிலையில் பிலாலின் அண்ணன் அகமது பாஷாவை விசாரணைக்காக நேற்று முன்தினம் காலையில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அப்போது அங்கு வந்த மணிவண்ணன் பாரா போலீஸ்காரர் சுவர் ஓரமாக சாய்த்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அதன் கத்தி முனையால் அகமது பாஷாவை சரமாரியாக வயிற்றில் குத்தினார். இதில் வயிறு கிழிந்து படுகாயமடைந்த அகமது பாஷா சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து மணிவண்ணன் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மைலாப்பூர் துணை கமிஷனர் புகழேந்தி, உதவி கமிஷனர் சிவசங்கரன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். மேலும் கிழக்கு மண்டல இணை கமிஷனர் சேஷசாயியும் மைலாப்பூர் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இதையடுத்து போலீஸ் நிலைய பாரா பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் வெங்கடேசன் மற்றும் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மைலாப்பூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் புருஷோத்தமனுக்கும் சார்ஜ் மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications