லோக்பால் வரம்புக்குள் பிரதமர், சிபிஐ இயக்குனர், எம்பிக்கள் வருவார்களா?
டெல்லி: லோக்பால் சட்டத்தின் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் கொண்டு வருவதா இல்லையா என்பது குறித்து நாடாளுமன்றத்தின் முடிவுக்கே விட்டுவிட முடிவு செய்யப்படடுள்ளது.
மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்படட்ட பின் அதன் மீது விவாதம் நடத்தி, பிரதமரையும் அந்த வரம்புக்குள் கொண்டு வருவதா இல்லையா என்பதை எம்பிக்களே தீர்மானிக்கட்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த எம்பி அபிஷேக் சிங்வி தலைமையில் 30 அனைத்துக் கட்சி எம்பிக்கள் கொண்ட சட்ட அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தான் இந்த மசோதாவை உருவாக்கியுள்ளது.
அன்னா ஹசாரே முன் வைத்த லோக்பால் மசோதாவில் கூறப்பட்டுள்ள பல பரிந்துரைகளை இந்தக் குழு மசோதாவில் சேர்த்துள்ளது. அதே நேரத்தில் பிரதமர், கீழ்மட்ட அதிகாரிகள் ஆகியோரையும் நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் நடந்து கொள்ளும் முறையையும் லோக்பால் விசாரிக்கும் வகையில் இவர்களையும் மசோதாவின் வரம்புக்குள் சேர்க்க வேண்டும் என்று ஹசாரே குழு கோருகிறது.
இதை மத்திய அரசும், மற்ற கட்சியினரும் ஏற்க மறுக்கின்றனர். குறிப்பாக பிரதமர் பதவியை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வரவும், நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் செயல்படும் முறையையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர எந்தக் கட்சியும் தயாராக இல்லை.
ஆனால், பிரதமரை லோக்பால் சட்டத்தின் விசாரணை வரம்புக்குள் கொண்டு வராவிட்டால் இந்த மசோதாவையே ஏற்க மாட்டோம், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஹசாரே குழு எச்சரித்துள்ளது.
இதையடுத்து இந்த விவகாரத்தை நாடாளுமன்றம் வசம் விட்டுவிட அபிஷேக் சிங்வி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு முடிவு செய்துள்ளது.
அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் எம்பிக்களின் செயல்பாட்டையும் சிபிஐ இயக்குனரையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவதில்லை என்றும் இந்தக் குழு முடிவு செய்துள்ளது.
கீழ்மட்ட அதிகாரிகள் விஷயத்தில் இந்தக் குழுவுக்குள்ளேயே ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதனால், அவர்கள் விஷயத்தில் என்ன முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.
இந் நிலையில் இன்று இந்தக் குழு மீண்டும் கூடி, லோக்பால் மசோதாவுக்கு இறுதி வடிவம் தரவுள்ளது. இதையடுத்து இந்த மசோதா நாளை மறுதினம், 9ம் தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications