கரூரில் சாயப்பட்டறை பாய்லர் வெடித்து 4 கூலித் தொழிலாளர்கள் பலி: 19 பேர் காயம்
கரூர்: கரூரில் சாயப்பட்டறை பாய்லர் வெடித்துச் சிதறியதில் கூலித் தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
கரூர் மாவட்டம் டி.செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் லோகநாதன்(48). சொந்தமாக சாயப்பட்டறை நடத்தி வருகிறார். இந்த சாயப்பட்டறையில் நூல் சாயம் ஏற்றிக் கொண்டு இருந்த பாய்லர் நேற்று காலை 11 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில் சாயப்பட்டறையின் மேற்கூரை பெயர்ந்து, பல அடி தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டது. மேலும் சாயப்பட்டறையில் வேலை பார்த்த செல்லாண்டிபாளையம் காந்தி(50), கே.வி.நகரைச் சேர்ந்த பாஸ்கரன்(45), பீகார் மாநிலம் பிஜுவாடாவைச் சேர்ந்த ராம்பீப்(26) உள்ளிட்ட 3 பேர் பலியானார்கள்.
சாயப்பட்டறைக்கு வெளியே 200 அடி தூரத்தில் உள்ள வயலில் பீகாரைச் சேர்ந்த ராஜ்குமார் பிரகாஷ்(34) என்பவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும் இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட சுமார் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ பரவாமல் தடுத்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000, லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10,000 வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவி்ட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications