ஆரியங்காவில் தமிழக ஐயப்ப பக்தர்களை வரவேற்று உபசரித்த கேரளத்தவர்!

முல்லை பெரியாறு அணை பிரச்சனையினால் வரலாறு காணாத அளவில் தமிழக கேரள மக்களிடையே பிரிவினையை உருவாக்கி வருகிறது. காலம் காலமாக சகோதர்களாக வாழ்கிற நிலை தற்போது பகையாக மாறி வருவது குறித்தும் இரு மாநிலங்களிலும் உள்ள மக்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.
இதுவரை தேனி, குமுளி, வழியாக சபரிமலை சென்ற பக்தர்கள் செங்கோட்டை வழியாக செல்லுவதால் இப்பகுதியில் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
பக்தர்களுக்கு வரவேற்பு
இந்நிலையில் கேரள மக்களின் நல்லெண்ண நடவடிக்கையாக ஆரியங்காவு பஞ்சாயத்து தலைவி ஐயம்மாள், துணை தலைவர் சலீம், மற்றும் அப்பகுதி மக்கள் சபரி்மலை செல்லும் பக்தர்களை வரவேற்று உபசரித்து சபரிமலை பயணம் சிறப்பாக அமைய வாழ்த்தி அனுப்பினர்.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு பூ, சந்தனம், குங்குமம், மற்றும் இனிப்புகள் வழங்கி கனிவோடு வரவேற்று சபரிமலை அனுப்பி வைக்கின்றனர்.
நெகிழ்ச்சியான விருந்து உபசரிப்பு
இந்த நிகழ்ச்சி ஏராளமான பக்தர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது. அத்துடன் ஆரியங்காவு, தென்மலை பகுதியில் தமிழகத்தில் இருந்து சபரி்மலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் பசி போக்க கேரள மக்களால் அன்னதானம் செய்யப்படுகிறது. இதில் கேரள மக்களின் பாரம்பரிய உணவு கப்பை, கஞ்சி வழங்கப்படுவது ஐயப்ப பக்தர்களை கவர்ந்துள்ளது.
ஒரு சிலரால் தமிழக - கேரள உறவு பாதிக்கப்படும் நிலையில் ஆரியங்காவு பகுதி மக்களின் நல்லெண்ண உபசரிப்பு நடவடிக்கை ஐயப்ப பக்தர்களுக்கு மட்டுமின்றி ஏராளமான தமிழக மக்களின் நெஞ்சத்திலும் இடம் பிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications