கேரளாவில் தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு- எல்லையில் கண்காணிப்பு
செங்கோட்டை: சபரிமலை பக்தர்களின் பாதுகாப்பிற்காக செங்கோட்டை எல்லைப் பகுதியில் வழியெங்கும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இரவு மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
முல்லை பெரியாறு அணை பிரச்சனை விசுவரூபம் எடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக தேனி, குமுளி வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் தற்போது அங்கு நிலவும் உச்ச கட்ட பிரச்சனையால் செங்கோட்டை வழியாக சபரிமலை செல்கின்றனர்.
இருப்பினும் எப்போது எந்த இடையூறு வருமோ என ஐயப்ப பக்தர்கள் அச்சத்தில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்தநிலையில் பக்தர்களின் அச்சத்தை போக்க இலஞ்சி பகுதியில் இருந்து தமிழக எல்லை பகுதியான கோட்டைவாசல் வரை நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இரவும், பகலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகனங்களுக்கு பாதுகாப்பு
மேலும் தமிழகத்தில இருந்து செங்கோட்டை வழியாக சபரிமலை செல்லும் ஐயப்ப வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அதிக லோடு ஏற்றிச் செல்லும் ஆசிட் டேங்கர் லாரியை போலீசார் செங்கோட்டை பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர்.
போக்குவரத்து குறைவாக உள்ள இரவு நேரத்தில் மட்டும் டேங்கர் லாரியை அனுமதிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் கேரளாவில் இருந்து செங்கோட்டை, தென்காசி வரும் பஸ்கள் மற்றும் கேரள வாகனங்களுக்கும் போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். போலீசார் மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications