மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு என்ன இரட்டை நாக்கா?- அதிமுக எம்.பி. செம்மலை கேள்வி
புதுச்சேரி: புதுவையில் அன்னிய முதலீடு வராது என்று கூறும் மத்திய அமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்றத்தில் மட்டும் இதனை ஏன் ஆதரிக்கிறார்? அப்படி என்றால் அவருக்கு என்ன இரட்டை நாக்கா? என்று அதிமுக எம்பி செம்மலை கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அதிமுக எம்.பி. செம்மலை தலைமை தாங்கி பேசியதாவது,
மத்திய-மாநில அரசுக்கு எதிராக நாம் எழுப்பும் கண்டன கோஷம் நாடாளுமன்றத்தில் ஒலிக்கின்ற வகையில் இருக்க வேண்டும். மத்தியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற காங்கிரஸ் அரசு, இங்கே (புதுச்சேரியில்) நமது தயவில் ஆட்சி பொறுப்புக்கு வந்தது.
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு அறிவிப்பு என்ற மிகப்பெரிய ஆபத்து நம் நாட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை ஏன் அனுமதிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதில் அளிக்கும் சூழல் ஏற்பட்டது. அப்போது பாஜக எம்.பி.க்கள் அதனை எதிர்த்தனர். அந்த நேரத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இருந்து ப.சிதம்பரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு என்ற அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே தமிழக முதல்வர் ஜெயலலிதா இதனை எதிர்த்தார். ஆனால் புதுவை முதல்வர் ரங்கசாமி தன்னுடைய மைனாரிட்டி அரசை காப்பாற்றிக் கொள்ளவும், நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க வேண்டும் என்பதற்காகவும் வாய் மூடி மவுனமாக உள்ளார்.
சிறிய மாநிலமான புதுவையில் 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை இருப்பதால் அன்னிய முதலீடு வராது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசுகிறார். ஆனால் நாடாளுமன்றத்தில் மட்டும் இதனை ஏன் அவர் ஆதரிக்கிறார்? அவருக்கு என்ன இரட்டை நாக்கா? புதுவை மக்கள் தான் அவரை பற்றி முடிவு செய்து கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications