2ஜி விவகாரம்: ப சிதம்பரத்தை களங்கப்படுத்த முயற்சி - கபில் சிபல்

ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவராக அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சேர்க்கக் கோரும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் வரும் 17-ம் தேதி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சியாக, ப.சிதம்பரம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
இந்த சூழலில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் இன்று டெல்லியில் நிருபர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், "கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி 10-ல் தொலைத் தொடர்பு துறை அனுப்பிய கடிதம் குறித்த எந்தத் தகவலும், மத்திய நிதியமைச்சகத்துக்கு தெரியாது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுடன், அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அரசு பக்க பலமாக இருக்கும். அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறோம். தொலைத்தொடர்பு கொள்கையில் எந்தவிதத் தவறும் இல்லை. ஆனால், அதை நடைமுறைப்படுத்தியதில்தான் முறைகேடுகள் நடந்துள்ளன.
இவையெல்லாம் பொது விவாதத்தில் தீர்மானிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் அல்ல என்பதை அரசு உறுதியாகக் கூற விரும்புகிறது. அதை நீதிமன்றங்கள் தீர்மானிக்கட்டும்.
இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் மீது களங்கம் சுமத்த, பஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முயற்சி செய்கிறது," என்றார் கபில் சிபல்.












Click it and Unblock the Notifications