பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற கனிமொழி - கைகுலுக்கி வரவேற்ற எம்பிக்கள்!
சில்லரை வர்த்தகத்தில் நேரடி முதலீடு விவகாரம் ஓய்ந்ததால், 9 நாட்கள் அமளி, ஒத்திவைப்புகளுக்குப் பிறகு பாராளுமன்றம் கடந்த புதன், வியாழன் ஆகிய நாட்களில் சுமூகமாக நடந்தது. பல்வேறு விவாதங்களில் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
கனிமொழி எம்.பி. தினமும் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் 2 ஜி வழக்கு விசாரணையில் ஆஜராகி வருகிறார். வியாழக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு சி.பி.ஐ. கோர்ட்டு விசாரணை முடிந்தது. உடனே கனிமொழி நேராக பாராளுமன்றம் சென்று கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அவரை பாராளுமன்ற வளாகத்தில் கண்ட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் கைகுலுக்கி வரவேற்றனர். ராஜ்யசபைக் கூட்டத்தில் பங்கேற்ற கனிமொழியிடம், உள்ளே அமர்ந்திருந்த எம்.பி.க்கள் நலம் விசாரித்தனர்.
கனிமொழி பாராளுமன்றத்தில் இருந்த போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி விலைவாசி உயர்வு பற்றி விவாதத்துக்கு பதில் கூறிக் கொண்டிருந்தார். அந்த விவாதம் முடியும்வரை கனிமொழி ராஜ்யசபை கூட்ட அரங்கில் இருந்தார். நேற்று காலை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. எனவே, 2-வது நாளாக நேற்றும் கனிமொழி பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இன்றும், நாளையும் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டுக்கு விடுமுறை. எனவே, கனிமொழி நேற்று மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.