இலங்கை தமிழர்களின் வாரிசுகளுக்கு விடுதிகளில் இட ஒதுக்கீடு – ஜெ. உத்தரவு
சென்னை: தமிழக மாணவர்களைப் போன்று முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களின் வாரிசுகளுக்கும் அரசு விடுதியில் இடம் ஒதுக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அரசு மாணவர் விடுதிகளில் இலங்கைத் தமிழ் மாணவர்களுக்காகக் கூடுதலாக 5 சதவீத இடங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 21 ஆயிரம் முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று வர சிரமப்படுவதை அறிந்த முதல்வர், ஏற்கெனவே செயல்பட்டுவரும் மாணவர் விடுதிகளில் தங்கிப் பயில நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, தமிழகத்தில் இப்போது இயங்கிவரும் 1,294 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதிகளில், ஒவ்வொரு விடுதியிலும் இப்போது அனுமதித்துள்ள எண்ணிக்கைக்கு கூடுதலாக ஐந்து இடங்கள் வீதம் மொத்தம் 6,470 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்.
இதேபோன்று, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் இயங்கி வரும் 1,238 விடுதிகளில் ஒவ்வொரு விடுதியிலும் இப்போது அனுமதித்துள்ள எண்ணிக்கைக்கு கூடுதலாக 5 இடங்கள் வீதம் மொத்தம் 6,190 இடங்கள் உருவாக்கப்படும்.
இதனால் ஆண்டுக்கு ரூ. 7.40 கோடி அரசுக்குத் தொடர் செலவினம் ஏற்படும். இந்த நடவடிக்கை மூலம், அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களின் 12 ஆயிரத்து 660 குழந்தைகள் அரசு விடுதிகளில் தங்கிப் பயில வழி வகை செய்யப்பட்டுள்ளது என்று அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications