அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 26 மாண-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
விழுப்புரம்: விழுப்புரம் அருக அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 26 மாணவ, மாணவிகள் திடீரென வாந்தி எடுத்து மயக்கம் போட்டு விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த ராதாபுரத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் வழக்கம் போல் மாணவ- மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. இதனை மாணவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தபோது திடீரென சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மயங்கிய மாணவ-மாணவிகளை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி அளித்த பிறகு அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த தகவல் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்திக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதல்வர் தேன்மொழியை சந்தித்து இது பற்றி முறையிட்டார்.
இதனையடுத்து கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடல்நலம் சீரான பிறகு அந்த மாணவ-மாணவிகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பெற்றோர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.