மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்: 2 பேர் பலி-சுனாமி எச்சரிக்கை இல்லை
மெக்சிகோ சிட்டி: வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 11 வயது சிறுவன் உள்பட இருவர் பலியாகினர்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் நேற்று இரவு 7.47 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானது. மெக்சிகோ தலைநகரான மெக்சிகோ சிட்டி மற்றும் குரேரோ மாநிலத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மெக்சிகோ சிட்டியின் தென்மேற்கில் இருந்து 166 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் மெக்சிகோ சிட்டியில் வீடுகள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது இரவு முழுவதும் தெருக்களில் இருந்தனர். இந்த பயங்கர நிலநடுக்கத்தால் இகுவானா நகரில் 11 வயது சிறுவனும், பாலோபிளான்கோ அருகே ஒருவரும் பலியானதாக அரசு அதிகாரி தெரிவித்தார். இதனால் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நகரம் இருளில் மூழ்கியது.
சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. 6.7 அளவு நிலநடுக்கம் இருந்ததாகத் தெரிவித்த அமெரிக்க புவி ஆய்வு மையம் 30 நிமிடங்களில் நில நடுக்க அளவு 6.5 என்று அறிவித்தது.
மெக்சிகோ அதிபர் பிலிபே கால்டெரான் டுவிட்டரில் கூறியுள்ளதாவது, இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. ஏதாவது சேதம் பற்றி தகவல் கிடைத்தால் எங்களுக்கு தெரிவியுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.