வலுவான அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட முயற்சிப்பது தவறு- தா பாண்டியன் கண்டனம்
புளியங்குடி : முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட கேரள முயற்சிப்பது தவறானது என்று இந்தியன் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
சிவகிரி பேரூராட்சி தலைவராக இந்திய கம்யூனிஸ்டை சேர்ந்த இரணவீரு வெற்றி பெற்றார். இதையடுத்து நடைபெற்ற நன்றி தெரிவிப்பு பொது கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா பாண்டியன் பங்கேற்று பேசியதாவது,
உள்ளாட்சியில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் ஒதுக்கப்படும் நிதிகளை முறையாக பயன்படுத்த வேண்டும். அதே போல் மத்திய அரசு உள்ளாட்சிகளுக்கு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வாக்காளர்களுக்கு பணம், பொருள் கொடுத்து வெற்றி பெருபவர்களை தடுக்கும் வகையில் தேர்தல் சீர்திருத்தம் அமுல்படுத்த வேண்டும்.
அணையை இடிக்கக் கூடாது
116 ஆண்டுகளே ஆன வலுவான நிலையில் உள்ள முல்லை பெரியாறு அணையை இடித்து புதிய அணை கட்ட கேரள முயற்சிப்பது தவறானதாகும். பெரியாறு அணை வலுவிழந்துள்ளதாகவும், அது உடைந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைவார்கள் எனவும் கூறும் கேரள அரசு 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்மாநாபசாமி கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் நிலை குறித்து ஏன் கவலை கொள்ளவில்லை. அப்படியானால் முதலில் பத்மாநாபசாமி கோவிலை இடித்து விட்டு அதன்பின்பு முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்டட்டும். மேலும் அணை கட்டும் விஷயத்தில் தொழில்நுட்ப வல்லுனர்களின் கருத்தை இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சி ஆதரிக்கும் என்றார்.
16ம் தேதி உண்ணாவிரதம்
முன்னதாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக கேரள அரசும், அந்த மாநிலத்தின் அரசியல் கட்சிகளும் உருவாக்கி வரும் கலவரச் சூழலைத் தடுத்து நிறுத்த வேண்டும். இரு மாநிலங்களிலும் அமைதியை நிலைநாட்ட வேண்டும். எனவே, உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்புகளையும், வழிகாட்டுதல்களையும் காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும்.
இதை வலியுறுத்தி, வருகிற 16-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துச் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நல்லகண்ணு உள்ளிட்ட மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர் என்றார் தா.பாண்டியன்.