பாகிஸ்தான் அடத்தால் ஷம்சி விமானதளத்தை காலி செய்த யு.எஸ்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கொடுத்த கெடு முடிவதற்குள் அமெரிக்கா ஷம்சி விமானதளத்தை காலி செய்துள்ளது.
சமீபத்தில் நேட்டோ விமானங்கள் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் அரசும் இதனால் பெரும் கடுப்பாகியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைத்திருக்கும் ஷம்சி விமானதளத்தை 15 நாட்களுக்குள் அதாவது டிசம்பர் 11ம் தேதிக்குள் காலி செய்யுமாறு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது. இந்த விமான தளத்தைத்தான் தனது தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முக்கிய தளமாக அமெரிக்கப் படையினர் பயன்படுத்தி வந்தனர்.
இந்த கெடுவை நீட்டிக்குமாறு கேட்டும் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி சம்மதிக்கவில்லை. இதையடுத்து அமெரிக்கா ஷம்சி விமானதளத்தை காலி செய்யும் பணியை கடந்த 4ம் தேதி துவங்கியது. நேற்று அதாவது கெடுவின் கடைசி நாளன்று அமெரிக்கா விமானதளத்தை காலி செய்தது. கடைசி விமானம் புறப்படுவதற்கு முன்பு அங்கிருந்த தேவையில்லாத பொருட்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
அமெரிக்கா இடையேயான மோதலின் உச்சகட்டமாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையும் அமெரிக்க உளவு மற்றும் தாக்குதல் விமானங்களை (ட்ரோன்) சுட்டு வீழ்த்துவோம் பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.