செங்கோட்டை எல்லையில் கூடுதல் பாதுகாப்பு-வஜ்ரா வாகனத்துடன் தயார் நிலையில் போலீஸ்
செங்கோட்டை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தினால் தமிழக – கேரளா எல்லையான செங்கோட்டை சாலைகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலவர காலங்களில் பயன்படுத்தக்கூடிய வஜ்ரா வாகனம் உள்ளிட்ட வாகனங்களுடன் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையால் கேரளா செல்லும் முக்கிய பாதையான குமுளி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் செங்கோட்டை வழியாக சபரிமலை செல்கின்றனர்.அத்துடன் அன்றாடம் கேரளாவுக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் தற்போது பன்மடங்கு பெருகி உள்ளது.
மறியல் செய்தவர்கள் கைது
அணையை பாதுகாக்க கோரி தமிழகத்திலும் பல இடங்களில் கொந்தளித்து வரும் மக்கள் கேரளத்தவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த சிலர் புளியரை பஸ் ஸ்டாண்ட் அருகே கேரள அரசு பஸ்சை மறிந்து திரும்பி செல்லுமாறு கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தீவிர கண்காணிப்பு
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா எல்லைக்கு தமிழக மக்கள் முற்றுகையிடுவதால் பதற்றம் எழுந்துள்ளதை அடுத்து செங்கோட்டையை அடுத்த இலஞ்சியில் இருந்து கேரள எல்லையான கோட்டை வாசல் வரை நூற்றுக்கணக்கான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் கூட்டத்தை கலைக்க போலீசார் பயன்படுத்தும் கண்ணீர்புகை வாகனங்களும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனமும் தமிழக எல்லை பகுதியான புளியரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications