திருமங்கலத்தில் உம்மன் சாண்டி கொடும்பாவி எரிப்பு: 20 வழக்கறிஞர்கள் கைது
மதுரை: திருமங்கலத்தில் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் போக்கை கண்டித்து அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டியின் உருவ பொம்மையை எரித்ததற்காக 20 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டியேத் தீருவோம் என்று கேரள அரசு பிடிவாதமாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் இரு மாநிலங்களிலும் வன்முறைச் சம்பவங்கள், போராட்டங்கள் நடந்து வருகின்றன.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் போக்கை கண்டித்து திருமங்கலத்தில் இன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று உருவ பொம்மையை எரித்ததற்காக 20 வழக்கறிஞர்களை கைது செய்தனர்.