சென்னை டிசிஎஸ் பயிற்சி மைய வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- 5000 பேர் வெளியேற்றம்

சென்னை அம்பத்தூரில் ஆர்.ஆர். ஸ்கைலைன் என்ற 6 மாடி தகவல் தொழில்நுட்ப அலுவலக வளாகம் உள்ளது. இங்கு டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தின் பயிற்சி மையம் அமைந்துள்ளது. வேறு சில அலுவலகங்களும் இங்கு உள்ளன.
அதில் ஒரு நிறுவனத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசிஎஸ் மற்றும் பிற அலுவலகங்கள் மூடப்பட்டன. டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் 1000 பேர் உள்பட 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மேலும் அலுவலகங்கள் முழுவதிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய்கள் சகிதம் வெடிகுண்டு நிபுணர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதுகுறித்து டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,அம்பத்தூரில் டிசிஎஸ் நிறுவனம் அமைந்திருக்கும் வளாகத்தில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு இன்றுகாலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டன.
போலீஸாரும் சிறப்புப் படையினரும் அலுவலகம் முழுக்க சோதனை நடத்தினர். இந்த அலுவலகம், பயிற்சி மையம் என்பதால், டிசிஎஸ் நிறுவனத்தின் சென்னை அலுவலக பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications