சஸ்பெண்டான ஊழியரிடம் லஞ்சம் - மின் வாரிய நிர்வாக மேற்பார்வையாளர் உட்பட 2 பேர் கைது
கரூர்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட மின் வாரிய ஊழியரிடம் ரூ.5,000 லஞ்சம் கேட்ட மின் வாரிய நிர்வாக மேற்பார்வையாளர் உட்பட 2 பேரை, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் சரவணன்(40). இவர் குளித்தலை அடுத்த நச்சலூர் துணை மின் நிலையத்தில் மின் பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த பிப்ரவரியில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதனால் பிழைப்பு ஊதியம் கேட்டு, கடந்த 13ம் தேதி கரூர் மின் வாரிய நிர்வாக மேற்பார்வையாளர் தட்சிணாமூர்த்தி, கணக்கு மேற்பார்வையாளர் சரவணன் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்தார். அப்போது மாத பிழைப்பூதியம் வழங்க ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்க விரும்பாத சரவணன், இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி, மின் வாரிய அலுவலகத்திற்கு சென்றார். மின் வாரிய நிர்வாக மேற்பார்வையாளர் தட்சிணாமூர்த்தி கூறியப்படி, அவரது புரோக்கர் நரசிம்மன் என்பவரிடம் சரவணன் லஞ்சப் பணத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. அம்பிகாபதி தலைமையிலான போலீசார் தட்சிணாமூர்த்தி, புரோக்கர் நரசிம்மன் உள்ளிட்டோரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications