தமிழர்கள் மீது தாக்குதல்: கேரளாவில் இருந்து நெல்லை திரும்பும் வியாபாரிகள்
நெல்லை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையால் கேரளாவில் வசிக்கும் தமிழக வியாபாரிகள் அதிக அளவில் ஊர் திரும்பி வருகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையால் தமிழகம் மற்றும் கேரளா இடையேயான உறவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்டு வருகின்றன. இதே போன்று கேரளாவில் வசிக்கும் தமிழர்களை மலையாளிகள் தாக்கி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் மூன்று வழித்தடங்களும் அடைக்கப்பட்டுள்ளன. கடந்த 10 நாட்களாக தமிழக-கேரள எல்லைப் பகுதியை நோக்கி பொதுமக்கள் செல்வதும், போலீசார் அவர்களை விரட்டியடிப்பதும் நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம், கடையம், சுரண்டை, அம்பை, சேரன்மகாதேவி, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் கேரளாவில் தங்கி பாத்திர வியாபாரம், கட்டிட தொழில், ஹோட்டல்களில் பணிபுரிந்து வருகின்றனர். கடையம் அருகே உள்ள புலவன் என்ற ஊரைச் சேர்ந்தவர் தாவீது. கோட்டயம் அருகே உள்ள ஏழாம் மைலில் 25 கடைகள் வைத்து கடந்த 20 வருடமாக பாத்திர வியாபாரம் செய்து வருகிறார்.
முல்லைப் பெரியாறு பிரச்சனை காரணமாக கேரளாவில் வாழும் தமிழர்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதால் ஏழாம் மைல் பஞ்சாயத்து தலைவர் தாவீதுவிடம் ஊருக்கு சென்று விடுங்கள், பிரச்சனை தீர்ந்ததும் திரும்பி வாருங்கள் என பலர் ஆலோசனை கூறியுள்ளனர். இதனால் அவர் உள்பட அப்பகுதியில் வியாபாரம் செய்து வந்த பல தமிழர்கள் ஊருக்கு வந்துவிட்டனர். இது போல் 1000க்கும் அதிகமானோர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளளனர்.
இருப்பினும் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் ஆரியங்காவு, தென்மலை, புனலூர், கொல்லம் போன்ற பகுதிகளில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.