முல்லைப் பெரியாறு விவகாரத்தால் கேரளாவில் தொடரும் வன்முறை-தினசரி ரூ. 10 கோடி நஷ்டம்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முதலில் வன்முறையைத் தொடங்கி தொடர்ந்து தமிழர்களையும், தமிழர்களின் இருப்பிடங்களையும் மலையாளிகள் தாக்கி வருவதால் பெரும் நஷ்டத்தை அவர்கள் சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக தினசரி ரூ. 10 கோடி அளவுக்கு நஷ்டத்தை அந்த மாநிலம் சந்தித்து வருகிறதாம்.
முல்லை பெரியாறு பிரச்சனையில் கேரளாவை சேர்ந்தவர்கள் முதலில் வன்முறையை தொடங்கி வைத்தனர்.
முல்லை பெரியாறு அணையின் தலை மதகை உடைக்க முயன்றதோடு இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் மூணாறு, கம்பம் பள்ளதாக்கிலும் உள்ள ஏலக்காய் தோட்டங்கள், தேயிலை தோட்டங்களில் பணிபுரிந்த அப்பாவி ஏழை தமிழர்களை தாக்கினர்.
இதையடுத்து தமிழர்கள் கேரள பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி அகதிகள் போல் தமிழகத்திற்குள் வந்தனர். தொடர்ந்து கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் சாலைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் இருந்து எந்த பொருளும் அங்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதனால் முல்லை பெரியாறு அணையை ஓட்டியுள்ள ஏலக்காய், தோட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்ட ஏலக்காய், வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தோட்டங்களில் உற்பத்தியான ஏலக்காயை பறிக்கவும், அதை பதப்படுத்தவும் ஆள் இல்லாத நிலை உள்ளது. இதனால் தினமும் கேரளாவுக்கு ரூ.10 கோடி அளவு இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே காய்கறி உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலை கேரளாவில் பல மடங்கு உயர்ந்து விட்டது. தக்காளி விலை ரூ. 100க்கும் மேல் போய் விட்டது. காய்கறிகளின் கதியும் இதேதான். பால் உள்ளிட்ட பொருட்களின் விலையும் விண்ணைத் தொட்டு நிற்கிறது. இத்தனை பொருட்களும் தமிழகத்திலிருந்து போனால்தான் உண்டு என்ற நிலையில் கேரள மக்கள் உள்ளனர்.
கேரளாவுக்கான பொருளாதார முற்றுகையை தமிழக கட்சிகள் தீவிரப்படுத்தினால் கேரளாவின் நிலை மேலும் சிக்கலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.