ரூ.25 லட்சம் நஷ்டஈடு கேட்டு திமுக துணை பொதுச் செயலாளர் மீது மதுரை கலெக்டர் சகாயம் வழக்கு
மதுரை: தமிழக சட்டசபை முன்னாள் துணைத் தலைவரும், திமுக துணை பொதுச் செயலாளருமான வி.பி. துரைசாமி மீது மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
நான் நாமக்கல் மாவட்ட கலெக்டராக 9.6.2008 அன்று நியமிக்கப்பட்டேன். அங்கு நான் கலெக்டராக இருந்த காலத்தில் அரசின் நலத்திட்ட பலன்கள் மக்களுக்கு சென்று சேரும் விதத்தில் சிறப்பாக செயல்பட்டேன். லஞ்சம், ஊழலை ஒழித்து நேர்மையான வெளிப்படையான அரசு நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
முறைகேடுகளில் ஈடுபட்ட வி.ஏ.ஓக்கள், தாசில்தார்களை பணியிடை நீக்கம் செய்தேன். வளர்கல்வி திட்டத்தில் நிதி முறைகேடு செய்த திட்ட ஒருங்கிணைப்பாளர் மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய உத்தரவிட்டேன்.
மேலும், ரேஷன் கடைகளில் ஏழை, எளிய மக்களுக்காக விற்கப்படும் மண்ணெண்ணெயை பயன்படுத்தி இயக்கியதற்காக 200க்கும் மேற்பட்ட லாரிகளை முடக்கினேன். இது தவிர தாங்கள் பணி செய்யும் கிராமத்திலேயே வி.ஏ.ஓக்கள் தங்கியிருக்க வேண்டும் என்ற அரசு உத்தரவை கறாராக அமல்படுத்தினேன்.
இந்த சூநிலையில், 28.9.2010 அன்று அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டேன். இதனை நிர்வாக ரீதியான பணியிட மாற்றம் என்றே கருதினேன்.
ஆனால் எனது பணியிட மாற்றம் பற்றி அப்போதைய சட்டப் பேரவை துணை தலைவர் வி.பி. துரைசாமி, வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் என்னைப் பற்றி அவதூறான கருத்துக்களை கூறியிருந்தார். அவர் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. என் பெயரைக் களங்கப்படுத்தவே இவ்வாறு கூறியுள்ளார்.
எனவே, எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திய துரைசாமி எனக்கு ரூ. 25 லட்சம் நஷ்ட ஈடு தர உத்தரவிட வேண்டும்
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.