கேரளாவுக்கு எதிராக செங்கோட்டை, களியக்காவிளை பாதையை மூடுவோம்-நாம் தமிழர் இயக்கம் எச்சரிக்கை
நெல்லை: கேரளாவுக்கு தகுந்த பாடம் புகட்ட செங்கோட்டை, களியக்காவிளை எல்லைகளை மூடுவோம் என்று நாம் தமிழர் இயக்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் வழக்கம்போல் மத்திய அரசு மவுனம் காப்பது கேரள அரசின் நியாயத்துக்கு புறம்பான செயலுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் உள்ளது என்று தமிழக மக்கள் கருதுகின்றனர். பேச்சுவார்த்தை, ஒப்பந்தம், வழக்கு, தீர்ப்பு என அனைத்து கட்டங்களையும் தாண்டி வந்த பின்பு மீண்டும் பேச்சுவார்த்தை என்ற முதல் கட்டத்துக்குள் நுழைவதை தமிழக விவசாயிகள் விரும்பவில்லை. எனவே தேனி, மதுரை, ராமநாதபுரம் விவசாயிகள் தன்னிச்சையான போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கேரள எஸ்டேட்டுகளில் வேலை பார்க்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் அடித்து விரட்டப்பட்டு உடமை இழந்த நிலையில் உயிர் பிழைத்தால் போதும் என்று தமிழகத்திற்கு தப்பியோடி வருகின்றனர். மேலும் இங்கிருந்து தான் ஐயப்ப பக்தர்கள் கேரளாவுக்கு அதிக அளவில் செல்கின்றனர். பக்தர்கள் என்று கூட பாராமல் மலையாளிகள் அவர்களையும் தாக்கியுள்ளனர். இதனால் செங்கோட்டை, களியக்காவிளை சாலைகளை முற்றுகையிட்டு கேரளாவுக்கு செல்லும் அரிசி, காய்கறி, பால், மணல் மற்றும் அத்திவாசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை மறிக்க வேண்டும் என்ற உத்வேகம் நெல்லை, குமரி மாவட்டத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நாம் தமிழர் இயக்க தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சிவகுமார் கூறுகையில், கம்பம் மெட்டு உள்ளிட்ட வடபகுதி நுழைவாயில்கள் அடைக்கப்பட்டதால் கேரளாவுக்கு செல்லும் அத்தியாவசியப் பொருட்கள் தடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கேரள அரசும், மலையாளிகளும் இன்னும் அணையின் நீர்மட்டத்தைக் குறைப்பது பற்றியும், புதிய அணை கட்டுவது பற்றியும் வலியுறுத்துகின்றனர். இது சட்டத்துக்கு புறம்பானது.
மேலும் தமிழர்களை தாக்கியும், தமிழ் பெண்களை பாலியல் சித்ரவதை செய்தும் மனித உரிமையை நசுக்குகியுள்ளனர். எனவே செங்கோட்டை, களியக்காவிளை சாலைகளை மூட வேண்டும். இல்லையேல் தமிழர் அமைப்புகளை ஒன்று திரட்டி விரைவில் இரு பாதைகளும் அடைக்கப்படும் என்றார்.