சிரஞ்சீவி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு அமைச்சர் பதவி: புத்தாண்டுக்குள் பதவியேற்பு
ஹைதராபாத்: காங்கிரஸ் கட்சியுடன் ஐக்கியமாகியுள்ள சிரஞ்சீவி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆந்திராவில் கிரண் குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த முறை எப்படியும் அரசு கவிழ்ந்துவிடும் என்று பலரும் நினைத்தபோது சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியைச் சேர்ந்த 17 பேர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் கிரண் குமார் ரெட்டி அரசு தப்பியது.
இக்கட்டான சூழ்நிலையில் கைகொடுத்து காப்பாற்றிய பிரஜா ராஜ்ஜியம் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து நன்றிக் கடன் செலுத்த காங்கிரம் மேலிடம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆந்திர காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம் நபி ஆசாத் சிரஞ்சீவியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்காவது அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்ற சிரஞ்சீவியின் கோரிக்கையை குலாம்நபி ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.
இந்த மாத இறுதிக்குள் சிரஞ்சீவி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் அமைச்சர்களாக பதிவி ஏற்பார்கள் என்று தெரிகிறது. யார், யாரை அமைச்சராக்குவது என்று தனது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களுடன் சிரஞ்சீவி ஆலோசனை நடத்தி வருகின்றார்.