சென்னை ஓட்டேரில் லீஸ் வீடு .. வாடகையை மிச்சப்படுத்த நினைத்தவருக்கு கனவிலும் நினைக்காத ட்விஸ்ட்
சென்னை: சென்னையில் லீசுக்கு வீடு பார்ப்போர் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒரே வீட்டை பலருக்கும் காண்பித்து ஏமாற்றுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். ஒத்திக்கு வீடு பார்க்கும் போது, அந்த வீடு அவருடைய வீடு தானா என்பதை அறிய இபி பில் கேட்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல், ஒரே வீட்டை பலருக்கும் ஒத்திக்கு விடுவதாக ஏமாற்றுகிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும். ஏனெனில் சென்னை ஓட்டேரியில் ஒரே வீட்டை காண்பித்து பலரிடம் பண மோசடி தந்தைக்கு உடந்தையாக இருந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் இன்று வீட்டு வாடகை சாதாரணமாக 10 ஆயிரத்திற்கு மேல் போய்விட்டது. ஓரளவு நல்ல பகுதிகளில் இரண்டு படுக்கை வசதி வீடு என்றால் மாதம் 20 ஆயிரம் ஆக வாடகை இருக்கும். மேற்கு மாம்பலம், மயிலாப்பூர், அடையாறு, மந்தைவெளி, கோடம்பாக்கம், தி நகர், வட பழனி, கேகே நகர், அண்ணா நகர், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, பெரம்பூர், புரசைவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் நல்ல வீட்டின் வாடகை 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வாடகை போகிறது. உயர்தரமான அடுக்குமாடி வீடு அல்லது தனி வீடு என்றால் ஒரு லட்சம் வரையிலும் வாடகை வாங்குகிறார்கள்.

வாடகை உச்சமாக இருப்பதாக சிறிய லீஸ் வீடுகளுக்கு டிமாண்ட் அதிகமாக உள்ளது. அப்படி லீஸ் வீடு தேடுபவர்களை சிலர் குறிவைத்து ஏமாற்றுகிறார்கள். சிலர் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை தங்களுடைய வீடு என்று பொய் சொல்லி ஏமாற்றுகிறார்கள். சிலர் ஓனர் இல்லாத வீடுகளை லீசுக்கு விடுவதாக பொய்யான தகவல்களை கூறி ஏமாற்றுகிறார்கள். சிலர் ஒரே வீட்டை காண்பித்து பலரிடம் பண மோசடி செய்கிறார்கள். அப்படியான சம்பவம் சென்னை ஓட்டேரியில் நடந்துள்ளது.
சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த 54 வயதாகும் குமாரராஜா என்பவர் கட்டிட கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் ஓட்டேரி பகுதியில் குத்தகைக்கு வீடு தேடி வந்துள்ளார். அப்போது, அதே பகுதியில் டிபன் கடை நடத்தி வரும் சங்கர் என்பவர், குமாரராஜாவை அணுகி தனது வீட்டை குத்தகைக்கு விடுவதாக தெரிவித்துள்ளார். ரூ.4.5 லட்சத்திற்கு வீடு குத்தகைக்கு விட ஒப்பந்தம் செய்து, அதற்கான தொகையையும் பெற்றுக் கொண்டு பத்திரம் எழுதி கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால், பின்னர் பேசியபடி வீட்டை ஒப்படைக்காமல் இருந்த சங்கர், பணம் எதுவும் பெறவில்லை என்றும், ஒப்பந்த பத்திரம் போலியானது என்றும் கூறி குமாரராஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து குமாரராஜா அளித்த புகாரின் பேரில், தலைமைச் செயலக குடியிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், சங்கர் பத்திரம் வாங்கியதும், குமாரராஜாவை வீட்டிற்கு வரவழைத்து பணம் பெற்றதும் உறுதியானது. மேலும், ஒரே வீட்டை காண்பித்து பலரிடமும் பணம் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது. இதற்கிடையே சங்கர் தலைமறைவானார். சங்கருக்கு உடந்தையாக இருந்த என்ஜினீயரிங் பட்டதாரியான அவரது மகள் நந்தினி (27) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சங்கரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆசை ஆசையாக லீஸ் வீட்டிற்கு குடிபோக விரும்பும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் இப்படியும் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.














Click it and Unblock the Notifications