மன நலம் பாதித்த தங்கை-தீவைத்துக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த அண்ணன்!
சிவகங்கை: மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தங்கையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அண்ணன் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த மேலவூரணி வக்கீல் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். தங்க நகை செய்யும் கொல்லராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி தனலட்சுமி (30). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
சமீபத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தனலட்சுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது அண்ணன் ராஜ்குமார் (32) உடன் இருந்து தனலட்சுமியை கவனித்து வந்தார். தனலட்சுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் அவரது மனநலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனை தாங்க முடியாத ராஜ்குமார் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு பாட்டிலில் பெட்ரோலுடன் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த நேரத்தில் தனலட்சுமியின் மீதும் தன் மீதும் ராஜ்குமார் பெட்ரோலை ஊற்றிக் கொண்டார். அதன்பிறகு 2 பேர் மீதும் தீ வைத்தார்.
இதில் தனலட்சுமி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். பலத்த தீக்காயமடைந்த ராஜ்குமார் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ராஜ்குமாரின் தாய் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். அதேபோல தங்கைக்கும் மனநிலை பாதிக்கப்பட்டதால், ராஜ்குமாருக்கு யாரும் பெண் கொடுக்கவில்லை. அதனால் மனமுடைந்த அவர் தனது தங்கையைக் கொன்று தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.