பரமக்குடி துப்பாக்கிச் சூடு: சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

செப்டம்பர் 11-தேதி பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் குருபூஜையின் போது பெரும் கலவரம் ஏற்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர் பலர் காயமடைந்தனர். இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையிலான ஒருநபர் விசாரனைக் கமிஷனை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியது.
சிபிஐ விசாரணை தேவை
ஆனால் இந்த விசாரனை கமிஷனுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரி வழக்குரைஞர்கள் முருகன், விஜயன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கேஎன் பாஷா மற்றும் வேணுகோபால் ஆகியோர் தலைமையிலான பெஞ்ச், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டனர். பத்துநாட்களுக்குள் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்றும் தெரிவித்தனர். மேலும் உயர்போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழு கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டனர்.












Click it and Unblock the Notifications