கிறிஸ்துமஸ் பண்டிகை: கோலாகல கொண்டாட்டம்- ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆளுநர் ரோசைய்யா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக தலைவர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவி்த்துள்ளனர்.

இன்று கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகத்தில் அனைத்து பேராலயங்களிலும் நள்ளிரவில் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

இன்று காலை நடந்த சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகளிலும் அவர்கள் கலந்து கொண்டு இயேசு பெருமானை வணங்கினர். கேக் வெட்டியும், புத்தாடை அணிந்தும் வழக்கமான உற்சாகத்துடன் தமிழகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸையொட்டி தலைவர்கள் கிறிஸ்துவப் பெருமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ரோசைய்யா வாழ்த்து:

இயேசு கிறிஸ்து பிறந்த தினவிழா கிறிஸ்துமஸ் விழாவாக மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கிறிஸ்துமஸ் விழா மகிழ்ச்சி, செல்வச்செழிப்பு, அன்பு, சகிப்பு தன்மை, அன்பு, இரக்கம் மற்றும் ஒற்றுமையை வழங்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

திமுத தலைவர் கருணாநிதி வாழ்த்துச் செய்தி:

அன்பு, இரக்கம், சகிப்புத்தன்மை, சேவை ஆகியவற்றை உரமாகக் கொண்டு மண்ணில் மனிதநேயப் பயிர் வளர்த்த மாமனிதர் இயேசு பெருமான் பிறந்த பொன்னாள் கிறிஸ்துமஸ் திருநாளாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

உலக மாந்தர் எல்லோரிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்ற இயேசுநாதர் உன் இனத்தாருக்குள் புறங்கூறித்திரியாதே, உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே, பழிக்குப்பழி என உன் இனத்தார் மேல் காழ்ப்புக் கொள்ளாதே, உன் மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்து இருப்பவர் மீதும், பகைவர் மீதும அன்பு கூர்வாயாக என்கிறார்.

அத்துடன் அதிகாரம் காரணமாக அடக்குமுறையில் ஈடுபடுவோர் குறித்து வருந்தும் இயேசுநாதர், தலைவர்கள் எனக் கருதப்படுபவர் மக்கள அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் பிறர் மீது தங்கள் அதிகாரத்தை காட்டுகிறார்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது.

உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும் என்று போதித்து பணி செய்தலே அதிகாரத்தின் உட்பொருள் என்பதை உணர்த்துகிறார்.

இப்படி தம் அன்பு, பணிவு, தொண்டு போன்ற பண்புகளை வளர்த்த அண்ணல் இயேசு பெருமானின் புகழ்பாடி கிறிஸ்துமஸ் திருநாள் கொண்டாடும் அருமை கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது இதயம்கனிந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாத்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து:

இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே என்பதை மூல முழக்கமாக கொண்டு இயங்குவது தேசிய முற்போக்கு திராவிட கழகம். ஏழைகளுக்கு செய்யும் தொண்டு, இறைவனுக்கு செய்யும் தொண்டு. இறைவனுக்கு செய்யும் தொண்டு என்றும், இவ்வுலகம் ஏழைகளுக்கே உரியது என்றும் போதிப்பது கிறிஸ்தவ மார்க்கம்.

தொண்டு, தியாகம், அன்பு, நல்லுறவு, நல்லிணக்கம் ஆகியவை மலரும் வகையில் மக்கள் வாழ்வதே ஏசு பெருமானால் நமக்கு போதித்த செய்திகளாகும். அவர் பிறந்த நன்னாளாம் இத்திருநாளில் அத்தகைய உயர் பண்புகள் செழிக்கும் வகையில் ஒருவருக்கு ஒருவர் அன்பையும், உறவையும் பேணும் வகையில் அமைந்திட இந்த கிறிஸ்துமஸ் நன்னாளில் எனது இதயமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனின் வாழ்த்து:

சமுதாயத்தில் அழுத்தப்பட்டு, நலிவடைந்த மக்களின் மீட்சிக்காக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகில் தோன்றிய இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகெங்கும் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது.

நாட்டில் அமைதி சமாதானம் மேலோங்கிட, வன்முறை ஒழிந்திட, அனைவரிடையேயும் அன்பு, பாசம், கருணை, மகிழ்ச்சி பொங்கிட சாதி, மத, இன வேற்றுமைகளை மறந்து நல்லிணக்கம் பேணிக்காப்போம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து:

ஆபத்துகளும் அதிர்ச்சிகளும் சூழம்போதெல்லாம் மனிதர்கள் இயேசு பெருமானின் பெயரை மனதில் உச்சரித்து அவரது உபதேச மொழிகளை நினைத்து ஆறுதல் பெறுகிறார்கள்.

உலகம் எங்கும் கொண்டாடப்படும் இக்கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில், கிறிஸ்தவப் பெருமக்களுக்கு மதிமுக சார்பில் இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வாழ்த்து:

அன்பு பாராட்டுதல், அனைவரையும் நேசித்தல், ஏழைகளுக்கு உதவுதல், எல்லோரையும் ஒன்றாகப் பாவித்தல், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகிய உயர் பண்புகளைத்தான் ஏசுபிரான் உலக மக்களுக்கு போதித்தார். எதனைப் போதித்தாரோ அதன்படியே வாழ்ந்து காட்டிய புனிதர் அவர். அவரது தூய்மையான எண்ணங்களும், மக்கள் துயர்துடைக்கும் செயல்களும் என்றும் உலகுக்குப் பாடமாக அமைகின்றன.

கிறிஸ்மஸ் திருநாளை மகிழ்ச்சியோடும் இந்நாளில், மதநல்லிணக்கம் வளர வேண்டும், மனித நேயம் மலர வேண்டும், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதே நமது லட்சியமாக இருக்க வேண்டும்.

பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து:

இயேசுவை பின்பற்றி ஒருவர் மீது மற்றவர் அன்பு செலுத்தி முடிந்த மட்டும் ஏழை- எளியவர்களுக்கு உதவி செய்து வாழ கற்றுக்கொண்டால் போட்டி, பொறாமை, பகை முதலியவை அகன்று அமைதி நிலவும்.

ஒருவர் மற்றவரிடத்தில் இருந்து அன்பு செலுத்துவதில் இருந்து அவர் என்னுடைய சீடர் என்பதை எல்லோரும் எளிதில் புரிந்து கொள்வார்கள்” என்பது வேதவாக்கு. இயேசுபிரானின் இந்த வாக்கை கிறிஸ்துமஸ் திருவிழாவாக கொண்டாடும் இந்த நாளில் கடைப்பிடித்து நன்மைகள் நிறையவும், தீமைகள் ஒழியவும் அனைவரும் உறுதியேற்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+