மீண்டும் சென்னை கூடுதல் ஆணையரானார் தாமரைக்கண்ணன்- பல ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை: தமிழக காவல்துறையில் பல உயர் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். சென்னை காவல்துறை கூடுதல் ஆணையராக தாமரைக்கண்ணன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் அதிமுகவை விட்டு சசிகலா குடும்பத்தினர் கூண்டோடு நீக்கப்பட்டனர். இதையடுத்து அவரது ஆதரவு ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. விரைவில் பெரும் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் உயர் போலீஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பின்படி, மாநில உளவுப்பிரிவு ஐ.ஜி. பி.தாமரைக்கண்ணன், சென்னை நகரின் சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இப்பதவியில்தான் நியமிக்கப்பட்டார். ஆனால் பின்னர் உளவுப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் கூடுதல் ஆணையராகியுள்ளார்.
கோவை போலீஸ் கமிஷனர் அம்ரேஷ் பூஜாரி, மாநில உளவுப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை நகரின் சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா, போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
சென்னை அமைச்சுப்பணி ஐ.ஜி. டி.பி.சுந்தரமூர்த்தி, கோவை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மனித உரிமை கமிஷனுக்கு டி.ராஜேந்திரன் மாற்றம்
மாநில தொழில்நுட்ப பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டி.ராஜேந்திரன், மாநில மனித உரிமை கமிஷன் கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. கே.பி.மகேந்திரன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய கூடுதல் டி.ஜி.பி. எம்.கே.ஜா, மாநில தொழில்நுட்ப பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. ஆர்.சேகர், புதிதாக உருவாக்கப்பட்ட ரயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்பார்.
சென்னை நிர்வாக பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், மாநில லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை ஆயுதப்படை போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. நரேந்திரபால்சிங், சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்பார் என்று அரசு தெரிவித்துள்ளது.
விரைவில் மேலும் பலர் இடமாற்றம் செய்யப்படுவர் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.