தமிழக-கேரள எல்லையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
புளியரை: தமிழக கேரள எல்லையில் இன்று அதிகாலை முதல் மதியம் 12 மணி வரை சுமார் 5 மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் 13 வழித்தடங்களில் குமுளி, செங்கோட்டை புளியரை, நாகர்கோவில் ஆகிய பாதைகளில் வாகனப் போக்குவரத்து அதிகம் இருக்கும்.
தற்போது சபரிமலை சீசன் என்பதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சபரி்மலை நோக்கி சென்று வருகின்றன. கடந்த 10 நாட்களாக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் பல பாதைகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இதனால் ஐயப்ப பக்தர்கள் வாகனம், காய்கறி வாகனங்கள், பிற சரக்கு வாகனங்கள் செங்கோட்டை-புளியரை வழியாக கேரளா நோக்கி செல்வதாலும், கேரளாவில் இருந்து ஏராளமான வாகனங்கள் தமிழகம் வருவதாலும் இப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் வணிக வரி, போக்குவரத்து துறையின் சோதனைச் சாவடிகளில் போதுமான பணியாளர்கள் இல்லாததாலும், கூடுதல் சிறப்பு கவுண்டர்கள் இல்லாத காரணத்தினாலும், சாலை நுழைவு வரி கட்ட கூட்ட நெரிசல் ஏற்படுவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். இன்று அதிகாலை முதல் மதியம் 12 மணி வரை சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் கேரள மாநிலம் எல்லை முதல் புளியரை வரை சுமார் 6 கிமீ தூரம் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் ஐயப்ப பக்தர்கள், திருவனந்தபுரம் விமான நிலையம் செல்பவர்கள், சரக்கு லாரி ஓட்டுபவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications