பிரதமர் வருகை- பாதுகாப்பு கருதி போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்- ஸ்தம்பித்தது சென்னை!
சென்னை: பிரதமர் மன்மோகன் சிங் வருகையின்போது அவரது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தி விட்டனர் சென்னை போலீஸார். இதனால் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கடும் பாதிப்பை மக்கள் சந்தித்தனர். கிட்டத்தட்ட சென்னை மாநகரின் போக்குவரத்தே ஸ்தம்பித்துப் போய் விட்டது.
பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு சென்னை வந்தார். ஆளுநர் மாளிகையில் தங்கிய அவர் இன்று காலை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த கணிதமேதை ராமானுஜர் 125வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்.
இதையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல்துறை செய்திருந்தது. அதன் ஒரு பகுதியாக போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தி விட்டனர்.
பாதுகாப்பு கருதி வாகனப் போக்குவரத்தை போலீஸார் முற்றிலும் நிறுத்தியதால் கிண்டி ராஜ்பவன் முதல் கடற்கரை காமராசர் சாலை முழுவதும் ஒரு வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக மயிலாப்பூர், கிண்டி, வேளச்சேரி, அண்ணா சாலை, அதன் பக்கவாட்டுச் சாலைகள், மீனம்பாக்கம், பல்லாவரம் வரை வாகனங்கள் ஆயிரக்கணக்கில் தேங்கி நின்றன.
எந்த வாகனமும் போக முடியாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் ஆம்புலன்ஸ்கள் கூட போக முடியாமல் திணறி விட்டன. அலுவலகளுக்குச் செல்ல கிளம்பியோர் வாகனங்கள் தேங்கிப் போனதால் பெரும் சிரமத்திற்குள்ளாகி விட்டனர்.
பிரதமர் வருகைக்காக இப்படியா போக்குவரத்தை முற்றிலும் நிறுத்துவது என்று மக்கள் குமுறித் தள்ளி விட்டனர்.
இருப்பினும் கருப்புக் கொடி போராட்ட அறிவிப்புகளால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. வாகனங்களிலிருந்தபடி குறிப்பாக மாநகர பஸ்களில் இருந்தபடி ஜன்னல் வழியாக யாரும் கருப்புக் கொடி காட்டி விடக் கூடாது என்பதற்காக இப்படிச் செய்து விட்டதாக கூறப்படுகிறது.