முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டக் கூடாது: பிரதமரிடம் ஜெ. மனு
சென்னை: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டக் கூடாது என்று கேரள அரசை வலியுறுத்துமாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக் கொண்டார்.
நேற்றிரவு சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை ஆளுநர் மாளிகையில் வைத்து முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. அப்போது அவர் முல்லைப் பெரியாறு விவகாரம் உள்பட பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி பிரதமரிடம் 16 பக்கங்கள் கொண்ட மனுவை கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
142 அடி நீரைத் தேக்க உத்தரவிட வேண்டும்
உச்ச நீதிமன்றம் 27.2.2006ல் அளித்த தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்க கேரள அரசு ஒப்புக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.
புதுப்பிக்கப்பட்ட அணையானது பாதுகாப்பானதாக இருப்பதால், புதிய அணை கட்டும் எந்த முயற்சியிலும் ஈடுபடக் கூடாது என கேரள அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
கேரளா இடையூறு செய்யக் கூடாது
மத்திய நீர்வள ஆணையம் பரிந்துரைத்துள்ளபடி மீதியுள்ள பலப்படுத்தும் பணிகளுக்கும், வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்கும் கேரள அரசு இடையூறு ஏதும் செய்யாமல் இருப்பதுடன், அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அறிவுரை கூற வேண்டும். இந்த அணைக்காக தமிழகத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றவும் கேரள அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.
மத்திய பாதுகாப்புப் படையை நிறுத்துக
முல்லைப் பெரியாறு அணை மற்றும் குத்தகைக்கு வழங்கிய இடத்தில் அத்துடன் இணைந்துள்ள கட்டுமானங்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை ஈடுபடுத்த வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் ஆபத்து நேரிட்டால் மேற்கொள்ள வேண்டிய பணிகளைத் திட்டமிட நிபுணர் குழுவை அமைக்க பிறப்பித்த அறிவிப்பாணையை வாபஸ் பெற வேண்டும்.
மீனவர் தாக்குதலை தேசியப் பிரச்சினையாக கருதுக
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் அல்லது விஷமிகள் தாக்குவதை தேசிய பிரச்சனையாகக் கருத வேண்டும் என்று ஏற்கெனவே வலியுறுத்தியிருக்கிறேன். இந்தியாவுக்கு எதிரான தாக்குதலாக இதைக் கருத வேண்டும் என குறிப்பிட்டுள்ளேன்.
2012 ஜனவரியில் இலங்கையுடன் பேச்சு நடக்கும்போது, இது குறித்து இலங்கை அரசுடன் இந்திய அரசு கடுமையாகப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
பாக் நீரிணைப் பகுதியில் பாரம்பரியமாக உள்ள மீன்பிடி உரிமையைப் பாதுகாக்கவும், மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கவும் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications