ராமதாஸ்- அன்புமணியின் மனகசப்புக்கு மருந்தான "அந்த நபர்"! மகனுக்கு அசைவ விருந்து கொடுத்த தந்தை
சென்னை: ராமதாஸ்- அன்புமணி ராமதாஸ் இடையே நடந்த பாசப்போராட்டத்தின் போது மகனுக்கு தந்தை அசைவ விருந்து வைத்து அசத்தினாராம். அதிலும் புதிதாக பிறந்த கொள்ளுபேத்தியை முதல்முறையாக ராமதாஸ் பார்த்ததும் கலங்கி போய்விட்டாராம்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் உற்று நோக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) உள்கட்சி பூசலுக்கும், குடும்பப் பனிப்போருக்கும் ஒருவழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் அரங்கேறிய தந்தை - மகன் சந்திப்பு, பாமக தொண்டர்கள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்தக் கண்ணீரில் நனைந்த தைலாபுரம் டாக்டர் ராமதாஸ் - சரஸ்வதி அம்மாள் தம்பதியரின் 61-வது திருமண நாளையொட்டி, இந்தச் சமரசப் படலம் திட்டமிடப்பட்டது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது மனைவி சௌமியா அன்புமணி, மகள்கள், மருமகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் திடீரென தைலாபுரம் தோட்ட இல்லத்திற்கு வருகை தந்தார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒட்டுமொத்த குடும்பமும் வாசலில் வந்து நின்றதும், வீட்டின் ஊழியர்கள் ஆரத்தி எடுத்து, திருஷ்டி தேங்காய் உடைத்து வரவேற்றனர். சுமார் 18 மாதங்களாகப் பேசாமல் இருந்த தந்தையும் மகனும் நேருக்கு நேர் சந்தித்த அந்த நொடி, அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.
அன்புமணியைக் கண்டதும் மருத்துவர் ராமதாஸ் உணர்ச்சிவசப்பட்டு, அவரை இறுக்கமாகக் கட்டியணைத்துக் கண்ணீர் வடித்தார். தந்தையின் அழுகையைக் கண்டு மகனும் கண் கலங்கினார்.
இவர்கள் கலங்கியதால் ஒட்டுமொத்த குடும்பமே கண்ணீர் கடலில் மிதந்தனர். இதையடுத்து பெற்றோரின் காலில் விழுந்து தம்பதியினர் ஆசி பெற்றனர். அதன் பின்னர், குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தடபுடலான மதிய விருந்தை ரசித்துச் சாப்பிட்டனர். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மட்டன் சுக்கா என விருந்தில் மெனுவின் பட்டியல் நீள்கிறது.
இந்த சந்திப்புக்கு பிறகு "இனிமேல் எல்லாம் நல்லதே நடக்கும்" எனச் செய்தியாளர்களிடம் அன்புமணி நம்பிக்கை தெரிவித்தார்.
நெகிழ்ந்த தந்தை: "நான் செய்ய நினைத்த சமூகநீதி கணக்கெடுப்பு, விவசாயிகள் பிரச்சனைக்கான கூட்டங்களை எல்லாம் நீயே முன்னின்று நடத்துகிறாய்" என்று அன்புமணியைப் பாராட்டி வாழ்த்தியுள்ளார் ராமதாஸ்.
இந்தக் குடும்பப் பிரிவின் பின்னணியில் வலுவான அரசியல் காரணங்கள் இருந்தன.
புள்ளியாய் முளைத்த வாரிசுப் போட்டி: 2024 டிசம்பர் பொதுக் குழுவில், ராமதாஸ் தனது பேரனான முகுந்தனை இளைஞரணித் தலைவராக அறிவித்தார். இதனை அன்புமணி தரப்பு கடுமையாக எதிர்த்ததால் உள்கட்சி மோதல் வெடித்தது.
பதவிப் பறிப்பும் நீதிமன்ற வழக்கும்: மோதல் முற்றவே, அன்புமணியைப் கட்சிப் பதவிகளில் இருந்து ராமதாஸ் நீக்கினார். பதிலுக்கு, தனக்கே முழு அதிகாரம் உண்டு என அன்புமணி சட்டப் போராட்டம் நடத்தி தேர்தல் ஆணையத்திடம் 'மாம்பழம்' சின்னத்தைப் பெற்றார்.
தேர்தல் களம்: அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இருவரும் தனித்தனிப் பாதைகளில் பயணித்தனர். அன்புமணி அதிமுக தலைமையிலான கூட்டணியில் 18 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களை வென்றார் (அவரது மனைவி சௌமியாவும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார்).
மறுபுறம், ராமதாஸ் தனித்துப் போட்டியிட்டு அவரது வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியைத் தழுவினர். சமரசத்தின் நிஜமான பின்னணி என்ன? இந்த திடீர் பாசப் பிணைப்பிற்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் தேர்தல் முடிவுகள்தான் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
தேர்தல் களம், பாமக தொண்டர்களும் வாக்கு வங்கியும் முழுமையாக அன்புமணியின் பக்கமே இருப்பதை நிரூபித்துக் காட்டியது. இதனால், கட்சியைத் தக்கவைக்கவும், தங்களின் வன்னியர் சங்க சொத்துக்களைப் பாதுகாக்கவும் கைகோர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை இரு தரப்புமே உணர்ந்துகொண்டன.
எட்டப்பட்ட ஒப்பந்தம்: இனிமேல் மருத்துவர் ராமதாஸ் தனது முதுமை மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வெடுப்பார். பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் முழு நிர்வாகக் கட்டுப்பாடும் அதிகாரப்பூர்வமாக அன்புமணி ராமதாஸின் வசமே இருக்கும் என இருவருக்குள்ளும் சுமுக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் அன்புமணியின் 2ஆவது மகள் சங்கமித்ராவுக்கு பிறந்த பெண் குழந்தையை முதல் முறையாக பார்த்ததும் ராமதாஸ் கண்ணீர் விட்டு அந்த குழந்தையை ஆரத்தழுவினார்.












Click it and Unblock the Notifications