ராஜ்யசபாவில் லோக்பால் மசோதா தாக்கலானது-போதிய எம்பிக்கள் இல்லாததால் காங் திக்.. திக்!!

லோக்சபாவில் இந்த மசோதா மீது நடந்த ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய 2 கட்சிகளின் எம்பிக்களும் வெளிநடப்பு செய்து, மத்திய அரசுக்கு மறைமுகமாக உதவியதால், இந்த மசோதா நிறைவேறியது.
இவர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தால் மசோதா தோற்றிருக்கும்.
அதே போல ராஜ்யசபாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மையே இல்லை. 245 பேர் கொண்ட இந்த அவையில் காங்கிரஸ், திமுக, மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோக் தள் ஆகிய கட்சிகளுக்கும், வெளியில் இருந்து மத்திய அரசை ஆதரிக்கும் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்தி ஆகிய கட்சிகள் அனைத்தையும் சேர்த்தாலும் மொத்தமே 93 எம்பிக்கள் தான் உள்ளனர்.
இதனால் ராஜ்சபாவிலும் இந்த மசோதாவை நிறைவேற்ற சமாஜ்வாடி கட்சி (5 எம்பிக்கள்), பகுஜன் சமாஜ் (18 எம்பிக்கள்), லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (4 எம்பிக்கள்) ஆகிய கட்சிகளையே மலைபோல நம்பியுள்ளது மத்திய அரசு. இந்த மூன்று கட்சிகளுக்கும் சேர்த்து 27 எம்பிக்கள் உள்ளனர்.
காங்கிரஸ் கூட்டணியின் 93 எம்பிக்களோடு இந்த 27 எம்பிக்களைச் சேர்த்தால், ராஜ்யசபாவில் உள்ள மொத்த எம்பிக்களில் கிட்டத்தட்ட 50 சதவீத ஆதரவைத் திரட்டிவிட முடியும்.
ஆனால், லோக்சபாவில் செய்ததைத் போல ராஜ்யசபாவிலும் இந்தக் கட்சிகள் வெளிநடப்பு செய்துவிட்டால், மசோதா வெல்வது சந்தேகமே. அதே போல இந்தக் கட்சிகள் பாஜக-இடதுசாரிகளுடன் கைகோர்த்துவிட்டால் மசோதா நிச்சயமாக தோல்வியடையும்.
இதையடுத்து முலாயம், லாலு, மாயாவதி ஆகியோருடன் மறைமுகமான பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் துவக்கினர்.
இதையடுத்து இன்று பிற்பகலில் ராஜ்யசபாவில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ராஜ்யசபாவில் மசோதாவை தாக்கல் செய்யும் முன் அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பதால் அது குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவரும் உடனடியாக ஒப்புதல் கொடுத்துவிட்டார். இதையடுத்து இன்றே மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன்மீது இன்று இரவு அல்லது நாளை வாக்ககெடுப்பு நடக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறுகையில், லோக்பால் மசோதா இன்றே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பரிசீலனைக்குப் பின்னர் இன்றோ அல்லது நாளையோ மசோதா நிறைவேற்றப்படும் என்றார்.
மக்களவையைப் போல மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேருவது உறுதி என்று நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் ஒருமித்த ஆதரவுடன் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும். எங்களது கட்சி உறுப்பினர்கள் 71 பேர் மாநிலங்களவையில் உள்ளனர். கூட்டணி கட்சிகளிடமும் மசோதாவை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications