தஞ்சை பெரியகோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்– பார்வையற்ற இளைஞர் கைது
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பார்வையற்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆயிரம் ஆண்டு பழமையான பிரகதீஸ்வரர் ஆலயம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பக்தர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மர்ம தொலைபேசி
இந்த நிலையில் சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 11 மணியளவில் பேசிய மர்ம நபர், தஞ்சை பெரிய கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. அது எந்த நேரத்திலும் வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். இதனையடுத்து தஞ்சை கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
வெடிகுண்டு சோதனை
இதைத் தொடர்ந்து தஞ்சை டி.எஸ்.பி. ஜோஸ் தங்கையா தலைமையில் போலீஸ் படையினர் தஞ்சை பெரிய கோவிலை முற்றுகையிட்டு தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்களும் இந்த சோதனையில் ஈடுபடுத்தபட்டனர். நள்ளிரவில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இருப்பினும் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுப்ட்டனர்.
பார்வையற்ற இளைஞர்
இதற்கிடையில் வெடிகுண்டு மிரட்டல் வந்த டெலிபோன் நம்பரை வைத்து விசாரணை செய்த போலீசார், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பாபு என்பவர் மகன் சங்கர் தான் அந்த மர்மநபர் என்பதை கண்டுபிடித்தனர்.
பார்வையற்ற வாலிபரான சங்கருக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். இதனால் சங்கர் குடிபோதையில் போலீசுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோல் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் தொலைபேசி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications