தணியாத பதற்றம்: தேனியில் இருந்து கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து மீண்டும் நிறுத்தம்
கம்பம்: தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதிகளில் பதற்றம் தணியாத காரணத்தினால் தேனி மாவட்டத்தில் இருந்து கம்பம்மெட்டு வழியாக கேரளத்துக்கு திங்கள்கிழமை தொடங்கப்பட்ட பஸ் போக்குவரத்து, செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை முன்னிட்டு தமிழக - கேரள எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தால், உத்தமபாளையம் வட்டாரத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இரு மாநில எல்லைப் பகுதிகளிலும் பேருந்துகள், வாகனங்கள் தாக்கப்பட்டன. இதனையொட்டி டிசம்பர் 5-ம் தேதி முதல் தேனி மாவட்டத்தில் இருந்து குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய பாதைகள் வழியாக பேருந்து மற்றும் சரக்கு வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேபோல, கேரள அரசு பேருந்துகளும், தமிழகப் பகுதிக்கு இயக்கப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி லோயர்கேம்ப், கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் உள்ள தமிழக எல்லை வரை காவல் துறை பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடர்ந்து, திங்கள்கிழமை கம்பம்மெட்டு சாலை வழியாக கேரளத்தில் உள்ள நெடுங்கண்டம், கட்டப்பனை ஆகிய இடங்களுக்கு தமிழக அரசு பஸ் இயக்கப்பட்டது.
போராட்டகுழு முற்றுகை
காவல் துறையின் பாதுகாப்புடன் சென்ற பேருந்தை நெடுங்கண்டம் அருகே கருணாபுரம் என்ற இடத்தில் கேரளப் போராட்டக் குழுவினர் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல்
கம்பம் அருகே புதுப்பட்டியில் இருந்து கிருஷ்ணமூர்த்தி மகன் முத்துச்செல்வம் (23) என்பவர் தனியார் ஜீப் மூலம் கேரளப் பகுதிக்கு திங்கள்கிழமை சென்றார். இடுக்கி மாவட்டம், கல்தொட்டி பகுதியில் உள்ள தனது ஏலத்தோட்டத்துக்குச் சென்ற அவரை, போராட்டக்காரர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மீண்டும் நிறுத்தம்
இதற்கிடையே எல்லைப் பகுதியில் பதற்றம் தணியாத நிலையில் கேரளத்துக்கு பஸ் இயக்குவதை நிறுத்த வேண்டும் என்று உத்தமபாளையம் வழக்குரைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து தேனி மாவட்டத்தில் இருந்து கம்பம்மெட்டு வழியாக கேரளத்துக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
எனினும், லோயர்கேம்ப், போடிமெட்டு ஆகிய பாதைகள் வழியாக தமிழக எல்லை வரை அரசு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.
ஜனவரி 2-ம் தேதிக்குப் பின்னர் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு பஸ் போக்குவரத்து தொடங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications