நதிகள் தேசியமயமான பின் மீண்டும் தமிழனாக பிறப்பேன்-அதிமுக தொண்டரின் உருக்கமாஈன கடிதம்!
தேனி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திற்காக தற்கொலை செய்து கொண்ட அதிமுக தொண்டர் ராமமூர்த்தி உருக்கமான கடிதம் எழுதி வைத்துள்ளார்.
இதுகுறித்து ராமமூர்த்தி எழுதி வைத்துள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
சீலையம்பட்டியை சேர்ந்த சேகர் முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்காக உயிர் தியாகம் செய்துள்ளார். இதை தொடர்ந்து நானும் உயிரை துறக்கிறேன். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறியதுபோல நதிகளை தேசியமயமாக்க வேண்டும்.
முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்காக 5 மாவட்டங்களில் சைக்கிள் யாத்திரை செல்ல இருந்தேன். கேரள அரசின் வரம்பு மீறிய செயல்களால் நமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடுமோ என பயந்து எனது உயிரை துறக்கிறேன்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட நானே கடைசி உயிர் பலியாக இருக்க வேண்டும் என அரசு கோரிக்கை விடுக்கிறேன். நதிகளை தேசிய மயமாக்கப்பட்ட பின்னர் மீண்டும் இந்த பூமியில் தமிழனாக பிறப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார் ராமமூர்த்தி.
முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்கு தீர்வு காண கோரி தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியை சேர்ந்த அ.மு.தி.க. பேச்சாளர் சேகர் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருத்தாசலத்தில் விஷம் குடித்து இறந்தார்.
அதேபோல கடந்த வாரம் தேனியை சேர்ந்த பாலத்துராஜா, ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் தீக்குளித்தனர். அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த ராமமூர்த்தி உயிர் நீத்துள்ளார்.
சின்னமனூரில் நேற்று கேரள அரசை கண்டித்து 20 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் கஸ்பா ரோட்டை சேர்ந்த ராமமூர்த்தியும் கலந்து கொண்டார். பேரணியின்போது இவர் மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் விசாரித்தபோது விஷம் குடித்து விட்டதாக கூறினார் ராமமூர்த்தி.
உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் ராமமூர்த்தி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
மூன்று அண்ணன்கள், ஒரு தங்கையுடன் பிறந்த ராமமூர்த்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் ராமமூர்த்தியின் உடல் சின்னமனூரில் அடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications