மருத்துவமனையில் அன்னா அனுமதி: உண்ணாவிரதம் கூடாது- மருத்துவர்கள் அறிவுரை

அன்னா ஹசாரேவுக்கு மார்புச் சளி அதிகம் இருந்ததால் கடுமையான இருமல் ஏற்பட்டு அவதிப்பட்டார். இதையடுத்து அவர் புனேவில் உள்ள சன்செட்டி மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக அவரது உதயவியாளரும், அவரது கிராமத்தைச் சேர்ந்த இருவரும் மருத்துவமனையில் தங்கியுள்ளனர். அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் இன்றும், நாளையும் நடைபெறுவதாக இருந்த அன்னா குழுவினரின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அவருக்கு நெஞ்சு பகுதியில் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது. அது மேலும் பரவாமல் இருக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இன்னும் 3 முதல் 4 நாட்களுக்கு மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று அவரது மருத்துவர் சன்செட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மருத்துவர் சன்செட்டி கூறியதாவது,
அன்னா உண்ணாவிரதம் இருக்கையில் கொஞ்சம், கொஞ்சமாக உணவைக் குறைத்து பிறகு முழுமையாக பட்டினி கிடப்பார். உண்ணாவிரதத்தை முடித்த பிறகு மெது, மெதுவாக உணவு உட்கொள்ளும் அளவை அதிகரிப்பார். இதனால் அவரது உடல் பலவீனமாகியுள்ளது.
அன்னா இனிமேல் உண்ணாவிரதம் இருப்பது அவருக்கு நல்லதல்ல. அவரது உடல் நிலையும், வயதும் அதற்கு ஏற்றதாக இல்லை. அதனால் இனிமேல் அவர் உண்ணாவிரதமே இருக்கக் கூடாது என்று நான் அறிவுறுத்துகிறேன் என்றார்.
உடல் நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க வேண்டியவர் அதை பாதையிலேயே முடித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பலவீனமாக உள்ளதால் இன்னும் ஒரு மாதத்திற்கு முழு ஓய்வு எடு்கக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் லோக்பால் மசோதா குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி இன்றும், நாளையும் நடக்கவிருந்த அன்னா குழுவின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு கருப்புக் கொடி:
புத்தாண்டையொட்டி பிரதமர் மன்மோகன் சிங் தனது மனைவி குர்சரண்கவுருடன் சேர்ந்து பஞ்சாபில் உள்ள பொற்கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிபாட்டை முடித்துக் கொண்டு வெளியே வந்த பிரதமருக்கு அங்கு திடீர் என்று கூடிய அன்னா ஆதரவாளர்கள் 40 பேர் கருப்புக் கொடி காட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பிரதமரின் பாதுகாவலர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் யாரும் அவருக்கு அருகில் வராமல் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications