குமரி, காஞ்சியில் 3 இஎஸ்ஐ மருத்துவமனைகள்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, மணவாளக்குறிச்சி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் புதிய ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைகளை அமைகக் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி சட்டத்தின் கீழ், தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்டம் என்ற ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு மருத்துவ வசதி, உடல் நலமின்மை உதவி, பேறுகால உதவி, உடல்நலமின்மைக்கான நீட்டித்த உதவி, சார்ந்துள்ளோர் நல உதவி, தற்காலிக இயலாமையுற்றோருக்கான உதவி, நிரந்தர இயலாமையுற்றோருக்கான உதவி, கருத்தடை அறுவை சிகிச்சைக்கான உதவி, இறுதிச் சடங்குக்குரிய உதவி, வேலை இழந்தோருக்கான உதவி மற்றும் ஊன்றுகோல், சக்கர நாற்காலி, பல்செட், மூக்கு கண்ணாடி வழங்குதல் போன்ற பல சமூக பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் மருத்துவ வசதிகள் வழங்கும் வகையில் தமிழ்நாட்டில் தொழிலாளர்களுக்கென 2,363 படுக்கைகள் கொண்ட 191 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் மற்றும் 9 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.
மாவட்டங்கள் தோறும் பெருகி வரும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, தேவைப்படும் மாவட்டங்களில் புதியதாக தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களை உருவாக்குவது அவசியமாகிறது.
இதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியில் “மூன்று மருத்துவர் வகை” கொண்ட மருந்தகம் ஒன்று துவங்குவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மணவாளக்குறிச்சி பகுதியில் “இரண்டு மருத்துவர் வகை” கொண்ட ஒரு மருந்தகத்தை தொடங்குவதற்கும், இம் மருந்தகத்திற்கு 2 உதவி மருத்துவ அலுவலர், 1 உதவியாளர், 1 இளநிலை உதவியாளர், 2 செவிலியர், 2 மருந்தாளுநர், 1 உதவி செவிலியர், 1 அலுவலக உதவியாளர், 2 மருத்துவமனை பணியாளர், 1 துப்புரவு பணியாளர் என 13 பணியிடங்களை உருவாக்குவதற்கும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இதே போன்று, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், படப்பைப் பகுதியில் “இரண்டு மருத்துவர் வகை” கொண்ட மருந்தகம் ஒன்று தொடங்குவதற்கும், 2 மருத்துவ அலுவலர், 1 உதவியாளர், 1 இளநிலை உதவியாளர், 2 செவிலியர், 2 மருந்தாளுநர், 1 உதவி செவிலியர், 1 அலுவலக உதவியாளர், 2 மருத்துவமனை பணியாளர், 1 துப்புரவு பணியாளர் என மொத்தம் 13 பணியிடங்களை உருவாக்குவதற்கும் ஆணையிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க வைத்தியம், சித்த வைத்தியம். சித்த மருத்துவ முறையில் மருத்துவ சிகிச்சை பெற விரும்பும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளில் சித்த மருத்துவப் பிரிவு ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. இது போன்று அரசு ஈட்டுறுதி மருந்தகங்களில் இந்திய மருத்துவ முறையான ‘சித்த மருத்துவப் பிரிவு’ துவங்கப்பட வேண்டும் என முதல்வர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் சென்னை மண்டலத்தில், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் மற்றும் திருவொற்றியூர், சேலம் மண்டலத்தில் கும்பகோணம் மற்றும் பள்ளிப்பாளையம், மதுரை மண்டலத்தில் தூத்துக்குடி, ராஜபாளையம் மற்றும் கோவில்பட்டி மற்றும் கோவை மண்டலத்தில் பொள்ளாச்சி மற்றும் துடியலூர் ஆகிய 10 இடங்களிலுள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களில் சித்த மருத்துவப் பிரிவு தொடங்குவதற்கும், மேற்கண்ட 10 அரசு ஈட்டுறுதி மருந்தகத்திற்கும், 1 உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் தகுதியில், 1 சித்த மருத்துவர் பணியிடம், 1 சித்த மருந்தாளுனர் பணியிடம், ஆக மொத்தம் 20 புதிய பணியிடங்களை ஏற்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications