இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்- நியூசிலாந்தில் 10 முறை நில அதிர்வு
கிறிஸ்ட் சர்ச் & ஜகார்தா: இந்தோனேசியாவில் இன்று கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில் நியூசிலாந்திலும் 10 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன.
நியூசிலாந்தின் 2வது பெரிய நகரமான கிறிஸ்ட் சர்ச் நகரில் கடந்த 23ம் தேதி மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந் நிலையில் புத்தாண்டு தின கொண்டாட்டம் தொடங்கிய டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் மீண்டும் நில நடுக்கங்கள் ஏற்பட்டவண்ணம் உள்ளன.
இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்தை மக்கள் அச்சத்துடனேயே மேற்கொண்டனர். கடந்த 24 மணி நேரத்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் 10 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இவை ரிக்டர் அளவுகோளில் 5.5 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளன.
இந்தோனேஷியாவிலும்...
இந் நிலையில் இன்று இந்தோனேசியாவிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. அதன் வடக்கு பகுதியில் உள்ள சுமத்ரா தீவில் உள்ள பாண்டா ஏக் மாகாணத்தில் அதிகாலை 2.09 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து வீடுகள் பயங்கரமாகக் குலுங்கின. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளில் இருந்து வெளியேறினர்.
2004ம் ஆண்டு கடும் பூகம்பமும், அதை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டதில் இந்தப் பகுதி தான் மிக அதிகமாக பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
ஜப்பானில் நேற்று மீண்டும் நிலநடுக்கம்:
அதே போல ஜப்பானின் தென் பகுதியில் கடலில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில்7 புள்ளிகளாக பதிவானது. எனினும் இந்நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஜப்பானின் தென் பகுதியில் மனித நடமாட்டம் இல்லாத தீவான டொரிஷிமோ அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இத்தீவு, தலைநகர் டோக்கியோவில் இருந்து 600 கி.மீ., தென்பகுதியில் உள்ளது.
நிலநடுக்கத்தால் டோக்கியோவில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. இதையடுத்து ஜப்பானின் மத்திய மற்றும் வடபகுதியில் இயங்கிய விரைவு ரயில்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக நிறுத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications