தீவிரவாதிகளின் 'குண்டுகளை' சமாளிக்க ரூ. 2400 கோடியை களமிறக்கும் டிஆர்டிஓ!

முன்பு கத்திச் சண்டை போட்டார்கள். பிறகு துப்பாக்கியை எடுத்துச் சுட்டார்கள், பின்னர் பீரங்கியால் பிளந்தெடுத்தார்கள். அதுவும் போய் அதிநவீன துப்பாக்கிகள், குண்டுகள் வந்தன. இப்போது அணு குண்டு காலம். அதுவும் கூட அட்வான்ஸ் ஆகி உயிரி ஆயுதங்கள், ரசாயண ஆயுதங்கள் வந்து விட்டன. மனித குண்டுகளும் பிரபலமாகி விட்டன.
இந்த நிலையில் பாகிஸ்தான் போன்ற சட்டத்தின் ஆட்சி சரிவர இல்லாமல் நடக்கும் நாடுகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்குப் போகும் அபாயம் பெரிதாகவே உள்ளது. இப்படிப்பட்ட நாடுகளிலிருந்து கசியும் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்குப் போய் அவர்கள் தங்களுக்குப் பிடிக்காத இந்தியா போன்ற நாடுகளைத் தாக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
இந்தநிலையில் இப்படிப்பட்ட அபாயகரமான சூழலை சமாளிக்கும் நடவடிக்கைகளில் இந்திய பாதுகாப்புத்துறை இறங்கியுள்ளது. அதில் ஒரு பகுதியாக ரூ. 1200 கோடி அளவில் அதி நவீன சாதனங்கள் பலவற்றை இந்திய பாதுகாப்புத்துறை நமது படையில் சேர்த்துள்ளதாம். மேலும் ரூ. 1200 கோடி அளவில் மேலும் பல சாதனங்களை சேர்க்கப்படவுள்ளது.
டோசிமீட்டர்கள், ஆட்டோஜெக்ட் இன்ஜெக்டர்கள், முதலுதவி சாதனங்கள், நெர்வ் ஏஜென்ட் டிடெக்டர்கள், போர்ட்டபிள் கேஸ் குரோமோட்டோகிராப், சுவாச முகமூடிகள், சூட்கள், ரோன்ட்ஜெனாமீட்டர்கள், என்பிசி இன்டகிரேட்டட் பீல்ட் ஷெல்டர்கள், டிகன்டாமினேஷன் சிஸ்டம் என இந்த அதி நவீன சாதனங்களின் வரிசை நீள்கிறது. இந்த சாதனங்களுக்கு என்பிசி (Nuclear, Biological and Chemical warfare) போர் சாதனங்கள் என்று பெயர்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுமைக்கும் இதுபோன்ற சாதனங்களை சேர்க்க ரூ. 10,000 கோடி செலவாகும் என்று டிஆர்டிஓ மதிப்பிட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவற்றை டிஆர்டிஓவே வடிவமைத்துள்ளது.
இதுகுறித்து டிஆர்டிஓ தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் டபிள்யூ. செல்வமூர்த்தி கூறுகையில், தற்போது பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டுள்ள என்பிசி பாதுகாப்பு சாதனங்களில் 85 சதவீதம் டிஆர்டிஓவின் தயாரிப்பாகும். பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் 60 தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் நிறுவனங்களில் இவை தயாரிக்கப்பட்டவை என்றார்.












Click it and Unblock the Notifications