58,000 ஹெக்டேர் நெல், 27,088 முந்திரி, 5750 கரும்பு, 2400 பருத்தி, 490 தென்னை சேதம்: ஜெ.விடம் அறிக்க
சென்னை: தானே புயல் தாக்கிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த அறிக்கைகளை பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கினர். அதன்படி நெற் பயிருக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், ஹெக்டேருக்கு ரூ. 10,000 அளவுக்கு இழப்பீடு தேவைப்படும் என்றும் அவர்கள் அறிக்கைகளில் தெரிவித்துள்ளனர்.
தானே புயலால் அதிகம் பாதிப்புக்கு உள்ளான கடலூர் மாவட்டத்தில் மட்டும் குடிசைகள் மற்றும் ஓடுகள் பதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மிகையான வீடுகளில் சேதம் ஏற்பட்டுள்ளது.
அதிகம் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் மட்டும் 5 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு தினமும் மீட்புப் பணிகளை கவனித்து வருகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரி அபூர்வா, கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். மேலும் அமைச்சர் மு.சி.சம்பத்தும் கடலூரிலேயே இருந்து பணிகளைக் கவனித்து வருகிறார்.
மேலும், 11 துணை ஆட்சியர்கள், நான்கு திட்ட அலுவலர்கள் என பலரும், பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இத்தனை பேர் இருந்தும் கூட அங்கு ஆவின் பால் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், குடிநீர் விநியோகம் முறையாக இல்லை என்றும் மக்கள் குமுறுகின்றனர். இதுதொடர்பாக கடலூரில் நேற்று பல இடங்களில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அதிகாரிகள் சார்பில் புயல் வெள்ள சேத மதிப்பீட்டு அறிக்கைகள் முதல்வரிடம் அளிக்கப்பட்டன.
அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்...
- கடலூரில் 58,000 ஹெக்டேர் நெற் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
- ஒரு ஹெக்டேர் நெற் பயிருக்கு ரூ. 10,000 இழப்பீடு தேவை.
- கடலூரில் 23,500 ஹெக்டேரும், விழுப்புரத்தில் 3588 ஹெக்டேரும் முந்திரி மரங்கள் சேதமடைந்துள்ளன.
- கடலூரில் 5750 ஹெக்டேர் கரும்பு, 2400 ஹெக்டேர் பருத்தி, 490 ஹெக்டேர் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளன.
இந்த அறிக்கைகளின் அடிப்படையில் மத்திய உதவி கோரி முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு விரைவில் கடிதம் அனுப்புவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications