காஞ்சியில் கந்துவட்டி பெண் கொடூரமாக வெட்டிக்கொலை: 2 பேருக்கு வலைவீச்சு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்த பெண்ணை 2 பேர் வீடுபுகுந்து வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் தென்கரைக்குளம் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (55). அவரது கணவர் ராமகிருஷ்ணன். கணவரைப் பிரிந்த லட்சுமி அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். துவக்கத்தில் விறகு வியாபாரம் செய்த அவர் பிறகு கந்து வட்டிக்கு பணம் கொடுக்க ஆரம்பித்தார்.
இதில் அவருக்கு பணம் பலபக்கத்தில் இருந்து வந்து கொட்டியது. இதையடுத்து அவர் தான் வசித்த பகுதியிலேயே 3 வீடுகளும், வெள்ள கேட் பகுதியில் 1 வீடும் வாங்கினார். நேற்று மாலை லட்சுமி வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் கண் இமைக்கும் நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து லட்சுமியை சரமாரியாக வெட்டிச்சாய்த்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதற்கிடையே லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அப்போது அவர் தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி.ராஜேந்திரன் மற்றும் சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சொத்து பிரச்சனையில் தான் இந்த கொலை நடந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கொலையாளிகள் யார் என்றும் போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். இந்நிலையில் போலீசில் சிக்காமல் நீதிமன்றத்தில் சரணடைய கொலையாளிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதற்கு முன்பு அவர்களை கைது செய்ய போலீசார் விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications